100 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு மோசடி நடந்துள்ளதாக பாஜக மாநில இளைஞர் அணி துணை தலைவரும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மகனுமான நயினார் பாலாஜி உள்ளிட்டார் மீது அறப்போர் இயக்கம் சார்பில் குற்றம் சாட்டி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மகனும், பாஜகவின் மாநில இளைஞரணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என் மீது அவதூறான பொய் புகார் எழுப்பப்பட்டுள்ளது. பத்திரப்பதிவில் மோசடி செய்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் நிலம் ஒன்றிற்கு விற்பனை ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளோம். அந்த இடம் மும்பையைச் சேர்ந்த குலாப் தாஸ் என்பவருடைய வாரிசுதாரர்களிடம் உள்ளது. 1934 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலமாக அந்த இடத்தை குலோப் தாஸ் பெற்றுள்ளார். முறையான ஆவணங்கள் நீதிமன்றம் மூலமாக பெற்ற சான்றிதழ் மூலமே இளையராஜா என்பவர் அந்த இடத்திற்கு பவர் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டு அவர் மூலம் அந்த இடத்தை விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளோம்.


அந்த இடத்தை ராதாபுரத்தில் நான் பதிவு செய்தேன் என்று என் மீது அறப்போர் இயக்கத்தின் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. ஆர்டிக்கல் 28 இன் படி பத்திரப்பதிவு நடைபெறும் இடத்தை தாண்டி வேறொரு பகுதியில் இருக்கும் இடத்தை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட இடத்தில் நிலம் ஒன்று வாங்கினால் போதும் என்பதே விதி. அதை கருத்தில் கொண்டு ராதாபுரத்தில் ஒரு இடத்தை வாங்கி அதற்கு பத்திரப்பதிவு செய்யும்போது சென்னை விரும்பாதத்தில் உள்ள இடத்திற்கான விற்பனை ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதாபுரத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணத்திற்கு தேவையான அனைத்து விசாரணையையும் சார்பதிவாளர் செய்து அதற்கான உண்மை தன்மை குறித்து கண்டறிந்த பின்னரே ஆவணங்களை தன்னிடம் ஒப்படைத்தார். தான் இந்த இடத்தை பதிவு செய்யும் போது உள்ள அனைத்து விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. நான் இந்த இடத்தை பதிவு செய்த பின்னரே பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. என் மீதும், எனது தந்தை மீதும் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்பும் விதமாக இது போன்ற செயல்களை சிலர் செய்து வருகின்றனர்.




இந்த அவதூறு விவகாரம் தொடர்பாக என் மீதும், என் தந்தையின் மீதும் குற்றச்சாட்டை ஆதாரம் இன்றி பரப்புவோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம். இந்த இடத்தை பலர் வாங்க முயற்சித்தும் அவர்களுக்கு நடக்கவில்லை என்பதற்காக இந்த பிரச்சனை கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதுகிறேன். அரசின் திட்ட மதிப்பீடு படியே ஒப்பந்தம் போடப்பட்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு கிரைய ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. 2.5 கோடி மதிப்பிற்கு கீழே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்திற்கான சந்தை மதிப்பு ரூபாய் 46 கோடியாக உள்ளது. அந்த இடத்திற்கான சொத்து மதிப்பு ஒப்பந்தத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த இடம் நாராயண கிராமி என்பவருக்கு சொந்தமான இடம். இவர் குலோப் தாஸ் என்பவரிடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஏல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அந்த இடத்தை கூடுதல் பணம் கொடுத்து குலாப் தாஸ் பெற்றுள்ளார். இந்த இடம் கோவிலுக்கோ, வேறு நபருடையதோ இல்லை. முறையாக இந்த இடத்தின் வாரிசுதாரர்களின் அனுமதியோடு பவர் ஏஜெண்ட் நியமிக்கப்பட்ட நபரிடமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்