தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில்  ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்  கலந்து கொண்டு  பேசுகையில், சிறுபான்மையினர் உரிமைகள் என்ன, கல்வி நிறுவனங்களுக்கான, சலுகைகள், உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில், அரசு மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது முதல்வர் இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளை பார்வையிடுவது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது, பிரதமர், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பாராட்டும் வகையில் முதல்வர் செயல்பாடு உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறுபான்மையின அமைப்புகள் உதவ முன்வர வேண்டும்.




தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவு நீரை பெருக்கவில்லை என்று பெரிய போராட்டம் நடத்துகிறார் அவருக்கு பாராட்டுக்கள். இதேபோல் தயவுசெய்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமரே அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டப்படாமல் இருக்கிறது. அதற்காகவும் அவர் ஒரு ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய 3000 கோடி செலவு செய்துள்ளனர் ஆனால் தற்போது விரைவாக மீட்பு பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுத்த  நடவடிக்கைகள் தான். தேர்தலுக்கு முந்தைய 2 ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய்  சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது. பல இடங்களில் தூர்வார பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர், அந்த குளங்கள் பணியின் விபரங்களை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்,



கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டிய பணியிடங்கள் முறையாக தரப்படவில்லை, பல கல்வி நிலையங்களில் இறப்பினால், ஓய்வால் ஏற்பட்ட காலியிடங்கள் கூட நிரப்ப அனுமதி கடந்த ஆட்சியில் கொடுக்கவில்லை, கடந்த 1999 வரை தேவைப்பட்ட இடங்களுக்கு ஒரே உத்தரவில் 14 ஆயிரம் பணியிடங்களை கலைஞர் அனுமதித்தார், அதன்பிறகு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால் பணியிடம் அனுமதிக்கவில்லை. தற்போது நாங்கள் இந்த கோரிக்கையை முதல்வருக்கு வைத்துள்ளோம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால் ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை.



சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறைகள் நடந்தால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும் வழிபாட்டு கூடங்களையும் அமைக்காதீர்கள் புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும் போது அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால் அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும் பல இடங்களில் கல்லறைகளில் மத வேறுபாடுகள் இருப்பதால் சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர். எனவே சாதி மத வேறுபாடின்றி சமத்துவ கல்லறைகளை உருவாக்கித் தர முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை ஆணைய செயலாளர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட பஞ்சாத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.