தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட மறவர்காலனி பகுதியை சேர்ந்த மணிமுருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள் (67). மணிமுருககுமார் இறந்து விட குருவம்மாள் தனியாக வசித்து வருகிறார்.லிங்கம்பட்டி பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது வாழ்வினை நடத்தி வருகிறார்




தனது வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி குருவம்மாள் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு இந்த மாதம் 4-ஆம் தேதி மருத்துவர் சீனிவாசன் தலைமையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த போதிலும் அரை மயக்கத்தில் இருந்த மூதாட்டி குருவம்மாளை பெண்கள் பொது பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.




மயக்கம் தெளித்த பின்னர் குருவம்மாள் தனது காலை பார்த்தபோது, இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களிடம் இது பற்றி கேட்டபோது அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்துள்ளனர். வலது காலுக்கு பதில், இடது காலில் ஆபரேஷன் செய்து விட்டார்கள் என்று அழுது புலம்பியுள்ளார். இது குறித்து அறுவை சிகிச்சை மருத்துவருக்கு ஊழியர்கள் சொல்ல, அவர் நேரில் வந்து பார்த்து ஒன்றும் பிரச்சினை இல்லை, இந்த காலில் கட்டி இருந்ததாகவும், அதனால் அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறியுள்ளார். 




தனது காலில் எந்த கட்டியும் இல்லை என்றும், வலது கால் வலி என்று வந்த தனக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்ததால் தற்பொழுது 2 கால்களிலும் கடுமையாக வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக மூதாட்டி குருவம்மாள் வேதனையுடன் கூறுகிறார். வலது காலில் அறுவை சிகிச்சை செய்து விடுவதாக மருத்துவர்கள் கூறியதாகவும், ஆனால் குருவம்மாள் மறுத்து விட்டதாகவும், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த கால் மட்டும் சரி செய்து கொடுங்கள் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.




இது பற்றி சம்பந்தபட்ட மருத்துவர் சீனிவாசனிடம் கேட்டபோது, ”இடது காலில் கொழுப்பு கட்டி இருந்ததாகவும், ஆகையால் தான் அதனை அறுவை சிகிச்சை செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும், இதில் எந்த பிரச்சினையும் இல்லை, மற்றொரு காலிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், நன்கு பணிபுரிந்து வருவதாகவும், சிலர்  இது போன்ற தகவலை தேவையில்லாமல் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.





இந்நிலையில் இதுகுறித்து,  தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முருகவேல் விசாரணை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மூதாட்டி குருவம்மாள், மற்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் சீனிவாசகன் , ஒட்டப்பிடாரம் அரசு மருத்துமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் முருகவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மூதாட்டிக்கு தவறான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதாகவும், முதற்கட்டமாக மருத்துவர் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துமனைக்கு பணி இடமாற்றம் செய்யப்படுவதாகவும். 2 நாட்களில் துறை ரீதியாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வலது காலில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.