மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும் திருநெல்வேலி தொகுதி எம்எலஏவுமான நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியுடன் இணைந்து இளையராஜா மீண்டும் ஒரு மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி ஒன்றை செய்யும் வேலையில் களமிறங்கியதாக புகார் எழுந்தது. அதாவது சென்னை விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலம் ஏற்கனவே பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோரினர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்பவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும், அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகப்பிரிவினை பத்திரத்தை பதிவு செய்துள்ளார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது  வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.


இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத  நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட  இளையராஜாவும், பாஜக  சட்டமன்ற உறுப்பினர்  நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை  23 ஆம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு சில சொத்துக்களையும், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள  சொத்துக்களையும் சேர்த்து போலியான முறையில் பத்திரபதிவை அப்போதைய ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணமாரியப்பன்  பதிவு செய்ததாக கூறப்படுகிறது.


இதனையடுத்து அறப்போர் இயக்கம் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது. இதனையடுத்து நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த வருடம் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து  பேட்டி அளித்தார்.




அப்போது அவர் கூறும் பொழுது, “என் மீது அவதூறான பொய் புகார் எழுப்பப்பட்டுள்ளது. பத்திரப்பதிவில் மோசடி செய்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் நிலம் ஒன்றிற்கு விற்பனை ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளோம். அந்த இடம் மும்பையைச் சேர்ந்த குலாப் தாஸ் என்பவருடைய வாரிசுதாரர்களிடம் உள்ளது. 1934 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலமாக அந்த இடத்தை குலோப் தாஸ் பெற்றுள்ளார். முறையான ஆவணங்கள் நீதிமன்றம் மூலமாக பெற்று சான்றிதழ் மூலமே இளையராஜா என்பவர் அந்த இடத்திற்கு பவர் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டு அவர் மூலம் அந்த இடத்தை விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த இடத்தை ராதாபுரத்தில் நான் பதிவு செய்தேன் என்பது என் மீது குற்றச்சாட்டு அறப்போர் இயக்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆர்டிக்கில் 28 படி பத்திரப்பதிவு நடைபெறும் இடத்தை தாண்டி வேறொரு பகுதியில் இருக்கும் இடத்தை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட இடத்தில் நிலம் ஒன்று வாங்கினால் போதும் என்பதே விதி. அதை கருத்தில் கொண்டு ராதாபுரத்தில் ஒரு இடத்தை வாங்கி அதற்கு பத்திரப்பதிவு செய்யும்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இடத்திற்கான விற்பனை ஒப்பந்தமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதாபுரத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணத்திற்கு தேவையான அனைத்து விசாரணையையும், சார்பதிவாளர் செய்து அதற்கான உண்மை தன்மை குறித்து கண்டறிந்த பின்னரே ஆவணங்களை தன்னிடம் ஒப்படைத்தார். நான் இந்த இடத்தை பதிவு செய்த பின்னரே பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. என் மீதும் எனது தந்தை மீதும் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்பும் விதமாக இது போன்ற செயல்களை சிலர் செய்து வருகின்றனர்” என்று பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தான், இந்த விவகாரத்தில் குலாப்தாஸ் நாராயணதாஸ் 1946 இல் மகாராஷ்டிராவில் இறந்ததாக ஒரு இறப்பு சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார். ஆனால் மற்றொருபுறம் இவர் 1944 இல் சென்னையில் இறந்ததாக வேறு ஒரு இறப்பு சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீநயினார் பாலாஜி, மற்றும் இளையராஜா ஆகியோர் மோசடி செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. எனவே தான் தற்போது அந்த நிலத்துக்கான பத்திரப்பதிவை, மண்டல பத்திரப்பதிவுத்துறை துணைத்தலைவர் அதிரடியாக ரத்து செய்துள்ளார். அறப்போர் இயக்கம் நீண்ட நாட்களாக பத்திரப்பதிவை நீக்க கோரி வைத்த புகார் மனு மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண