மே 18ம் தேதி நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு தூத்துக்குடி மாநகரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். தூத்துக்குடி மறவன் மடத்தில் உள்ள தனியார் ரெசார்ட்ஸில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.




”இலங்கையில் விடுதலை போராட்டம் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது. மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தது. 1 லட்சத்து 75 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த நூற்றாண்டில் எங்கும் நடக்காத மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தது. மே மாதம் 18-ந் தேதி போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த நாளை இனப்படுகொலை நாளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுசரிக்கின்றனர். அதனை இன எழுச்சி நாளாக கருதி மீண்டும் எழுச்சி பெறுவதற்கு வாய்ப்பாக இதனை பயன்படுத்துகிறோம். அதற்காக ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு தூத்துக்குடியில் நாளை(அதாவது இன்று) மாநாடு நடக்கிறது. எங்கள் உணர்வை இருமடங்காக்கி கொள்வதற்கான நாளாக மே 18-ஐ பார்க்கிறோம்.


சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் தருவார்கள் என்பதுதான் தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனையாக உள்ளது. ஆசிரியர் தேர்வு எழுதி காத்திருக்கிறோம் பணி தாருங்கள் என்கிறார்கள். மக்கள் நலப்பணியாளர்கள், மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். அவர்கள் கேட்பதை எல்லாம்  நிராகரித்து விட்டார்கள். அதனை விடுத்து குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000, பஸ்சில் இலவச பயணம் என்று மக்கள் கேட்காததை இலவசம் என்ற பெயரில் வழங்கி வருகின்றனர். மக்கள் பணத்தை எடுத்து  மக்களிடமே கொடுப்பதற்கு பெயர்தான் இலவசம். தரமான கல்வி, மின்சாரம், குடிநீர், சரியான பாதை ஆகியவற்றைதான் மக்கள் கேட்கிறார்கள். இதனை செயல்படுத்தவில்லை. 


புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பில் பொதுத் தேர்வு என்கிறார்கள். பிளஸ்-2 முடித்தவர்களே தோல்வியை தாங்கி கொள்ள முடியாத நிலை இருக்கும் போது சிறு குழந்தைகள் எப்படி தாங்கி கொள்வார்கள். புதிய கல்வி கொள்கையை அரசு ஏற்றுக் கொண்டுதான் உள்ளது. இல்லம் தேடி கல்வி புதிய கல்விக் கொள்கையில் உள்ளதுதான்.  தமிழகத்தில் தான் கடற்கரையில் சமாதிகள் வைக்கப்பட்டு உள்ளன. நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது போன்று நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மற்ற சிலைகள் அகற்றப்படும். பனம்பால்(கள்) உணவின் ஒருபகுதி என்று கூறப்படுகிறது. இந்த கள் கர்நாடகம், ஆந்திரா, கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கள் விற்றால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கும். மற்ற மாநிலத்தில் உள்ளவர்களுக்கு சாராய ஆலை இல்லை. ஆனால் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாராய ஆலை உள்ளது. இதனால் கள்ளை தடை செய்கிறார்கள். போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன?. நீட் தேர்வை முதலில் காங்கிரஸ் கொண்டு வந்த போது தி.மு.க. வரவேற்றது. அப்போது மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை யோசிக்கவில்லை. நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளை கடுமையான சோதனை செய்கின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நிலை இல்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி வீசிவிட்டு வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்.




கேரளா அரசு டிஜிட்டல் முறையில் எல்லையில் அளவீடு செய்வதை தமிழக அரசு தடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டது யார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே போலீசார் துப்பாக்கியுடன் தயாராக இருந்து உள்ளனர். துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை நடக்கிறது. வடமாநிலத்தவர்கள் தான் இதில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.


பேட்டியின் போது, மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் வேல்ராஜ், வக்கீல் பாண்டியன், சுப்பையா பாண்டியன், மாநில மகளிர் பாசறை அருண்சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.