டெல்லியில் விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ஆதரவு விவசாய தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து மறியல் போராட்டம் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.


காய்கறிகள் அணிந்து போராட்டம்:


இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ரேஷன் முறையை அமல்படுத்த வேண்டும். விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், கான்ட்ராக்ட் முறையை கைவிட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலாம் வரியை நீக்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது.


தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் 4 சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் மத்திய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து வந்து  நூதன போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மோடி அரசுக்கு எதிராக கண்டன கோசங்களையும் எழுப்பினர்.


500 பேர் கைது:


இந்த போராட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், மற்றும் அனைத்து தொழிற்சங்கங்க அமைப்புகள், விவசாய சங்கங்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  மேலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதியத்தை ஒருமுறை கூட உயர்த்தப்படவில்லை. அங்கன்வாடி திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல், காலி பணியிடங்களை நிரப்பாமல், ஊதிய உயர்வு வழங்காமல், அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கத்துடிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் திமுக - காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து வண்ணாரப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.