தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கருப்பாநதி அணை உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி அங்குள்ள வனப்பகுதியில் சட்டவிரோதமாக ஒரு சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி உணவுக்காக எடுத்து வருவதாக வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள வைரவன்குளம் பீட்மல்லிகாடு பகுதியில் கடைய நல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகேசன், வனவர் அம்பலவாணன், சிறப்பு பிரிவு வனவர் ரவீந்திரன், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர்  நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சொக்கம்பட்டியை சேர்ந்த முருகையா பாண்டியன், நெற்கட்டும் செவலை சேர்ந்த சாமிதுரை, அதே ஊரை சேர்ந்த இளங்காமணி ஆகியோர் அப்பகுதியில் இருந்துள்ளனர்.

  




கைது செய்யப்பட்ட சாமிதுரை, இளங்காமணி


மேலும் அவர்கள் வன விலங்குகளை நாட்டு துப்பாக்கியால் சுட்டும், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியும் வேட்டையாடியது தெரியவந்தது. குறிப்பாக மிளாவின் தலையுடன் கூடிய இறைச்சி பாகங்களை கையில் கொண்டு வந்துள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து அதனை பறிமுதல் செய்ததோடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் முருகையா பாண்டியன், சாமிதுரை, இளங்காமணி ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை எடுத்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண