சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் சுமார் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, வட்டக்கோட்டை போன்ற இடங்களுக்கு, சுற்றுலாப்பயணிகள் சென்றுவருகின்றனர். மேலும், சூரிய உதயம், சூரியன் மறையும் காட்சி ஆகியவற்றைக் காணவும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.




கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலில் தண்ணீர் மட்டம் குறையும் சமயங்களில் விவேகானந்தர் பாறைக்குப் படகு இயக்கப்படும். ஆனால், திருவள்ளுவர் சிலைக்குப் படகை இயக்கவியலாத நிலை ஏற்படும். இதற்குத் தீர்வு ஏற்படுத்தும் விதமாக, விவேகானந்தர் நினைவுப் பாறையிலிருந்து திருவள்ளுவர் பாறைக்குப் பாலம் அமைக்க கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முடிவுசெய்யப்பட்டது.




இந்த நிலையில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்குமிடையே கண்ணாடி இழை பாலம் அமைக்க 37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




இந்தப் பாலம், கண்ணாடி இழைகளால் அமைவதால் கடலையும், இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே பயணிகள் செல்ல முடியும். விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பயணிகள் மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் நிலை ஏற்படாது. விவேகானந்தர் பாறையிலிருந்து நடந்தே திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பார்வையிடலாம். இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்குமிடையே அமையும் கண்ணாடி இழை பாலம் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம்கொண்ட நடைபாதையாக அமையவிருக்கிறது. இந்த ஆண்டு, டிசம்பர் மாதத்துக்குள் இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.




கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை,133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நடைபெறுகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா என, 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தலா ரூ.4 கோடி மதிப்பில் கூடுதலாக இரு சொகுசு படகுகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் வாங்கப்பட்டன. தாமிரபரணி, திருவள்ளுவர் என பெயர் வைக்கப்பட்ட இந்த சொகுசு படகுகள், சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டன.இந்நிலையில், இந்த இரு நவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை ஒன்றரை மணி நேரம் கடலில் சுற்றுலா பயணிகள் உல்லாச பயணம் சென்று வருவதற்கு பயன்படுத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக இருகட்ட ஆய்வுகள் நடைபெற்ற நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.




இதற்கிடையே விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அத்துடன் வட்டக்கோட்டை வரையிலான சுற்றுலா படகு சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. வசதியுடன் படகில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.450, சாதாரண கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது,கன்னியாகுமரி படகு தளத்தில் இருந்து வட்டக்கோட்டை வரை சொகுசு படகுகளில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் சென்று வரும் திட்டம் அமலாகிறது. வட்டக்கோட்டையில் படகு நிறுத்துவதற்கு தற்போது படகுதள வசதி ஏதும் இல்லை.இதனால் வட்டக்கோட்டைவரை செல்லும் சொகுசு படகு, அங்கிருந்து கடல்வழியே சுற்றி மீண்டும் கன்னியாகுமரி படகு தளத்தை அடையும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றனர்.





அதே நேரத்தில் வட்டக்கோட்டையை சுற்றி பார்க்கும் வகையில் அங்கு படகுத்தளம் அமைக்க வேண்டும் என்கின்றனர் சுற்றுலாப்பயணிகள்.