எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டத்துக்கு உட்பட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இருக்கண்குடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.




எட்டயபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டம் அயன்ராஜாபட்டி, மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழ் நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை, செங்கோட்டை, அச்சங்குளம் போன்ற 9-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  சுமார் 10,500 ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்றவும், அயன்வடமலாபுரம், கீழ் நாட்டுக்குறிச்சி, மேலக்கரந்தை பாசன குளங்களுக்கு தண்ணீர் கொடுக்கவும், விருதுநகர் மாவட்டம் இருக்கண்குடியில் அர்ஜுனா நதி, வைப்பாறு ஆற்றின் குறுக்கே கடந்த 2004-ம் ஆண்டு சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 24 அடி கொள்ளளவு கொண்ட நீர்தேக்கம் கட்டப்பட்டது. 




நீர்தேக்கம் கட்டப்பட்டு சுமார் 18 ஆண்டுகளில் ஒரு முறை கூட பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது கிடையாது. அணை கட்டப்பட்டு 18 ஆண்டுகளில் அதன் முழுக் கொள்ளளவை 4 முறை மட்டுமே எட்டியுள்ளது. வைப்பாற்றில் இருக்கண்குடியிலிருந்து அயன் ராசாப்பட்டி, முத்துலாபுரம், வேடப்பட்டி, சித்தவ நாயக்கன்பட்டி, விளாத்திகுளம், வைப்பாறு கிராமம் வரை ஆற்றுப்படுகையில் இருபுறமுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் கிணறுகள், பாசன கிணறுகள், தொலைதூர கிராமங்களின்  கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகள் உள்ளன. 


சதுரகிரி மலை சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், சிவகாசி போன்ற பகுதிகளில் பெய்யக்கூடிய மழைநீர் காட்டாற்று வெள்ளமாக வைப்பாற்றில் வந்து சேர்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலம் தவிர்த்து கோடையில் கூட ஆற்றில் தண்ணீர் பாய்ந்தது. சுமார் 30 ஆண்டுகளாக வைப்பாறு முறையாக பராமரிக்கப்படாததால் ஆற்றில் முழுவதும் சீமைகருவேல மரங்கள் முளைத்து வனம் போல் ஆகிவிட்டது. இதனால் முழுமையாக நிலத்தடி நீர் அதள பாதாளத்துக்கு போய்விட்டது. 




இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கு பின் வைப்பாற்றில் அயன்ராசாப்பட்டி முதல் வைப்பாறு கிராமம் வரை ஆற்றில் முளைத்து வனம் போல காட்சியளித்த வேலி மரங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் பெருமுயற்சியால் தோண்டி அப்புறப்படுத்தி ஆற்றை மேடு பள்ளமின்றி சமதளமாக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டது.


ஆனால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை  இயல்பு மழையை விட குறைவாக பெய்ததால் வைப்பாற்றில் தண்ணீர் வரத்து அறவே இல்லை. இதற்கிடையே, இருக்கண்குடி அணை முழுக் கொள்ளளவு எட்டாவிட்டாலும் சுமார் 17 அடி தண்ணீர் உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுக்காததால் வைப்பாறு வடிநிலக்கோட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் உள்ள அப்பநேரி, மேலக்கரந்தை, சிந்தலக்கரை, சின்னூர், பள்ளாகுளம் போன்ற 29 பாசன குளங்களில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலான குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமங்களில் உள்ள ஊருணிகளும் வறண்டுபோயுள்ளன. 




இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, “இருக்கண்குடி அணையிலிருந்து வைப்பாற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனால் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றுப் படுகையோர கிராம மக்கள் பெரிதும் பயனடைவர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தில் சிறு அளவை கூட இங்கு கொடுப்பதில்லை. இருக்கண்குடி அணைக்கட்டு விருதுநகர் மாவட்டத்தில் இருந்தாலும் அதன் முழு தண்ணீர் பயன்பாடும் கோவில்பட்டி கோட்டத்துக்கானது. எனவே, மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் விருதுநர் மாவட்ட நிர்வாகம் இருக்கண்குடி அணைக்கட்டில் உள்ள தண்ணீரை சாத்தூர் குடிநீர் தேவைக்கு முழுமையாக பயன்படுத்துகிறது. எனவே எட்டயபுரம், விளாத்திகுளம் வட்ட மக்கள் நன்மை கருதி இருக்கண்குடி அணை கட்டிலிருந்து வைப்பாறு ஆற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.