தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் நடைபெற்ற இரு சமுதாய மக்களிடையே  பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக சமாதானம் பேச சென்ற நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞனமான மகாராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாதி கலவரத்தை தூண்டி விடுவதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் அவர்  நெல்லையில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற லாக்கப் டெத் தொடர்பான சிவந்திபட்டி வழக்கு, அம்பாசமுத்திரம் பல் உடைப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் இருந்து பின்வாங்க வைக்க  காவல்துறை உயர் அதிகாரிகள்  மறைமுகமாக என்னை  அறிவுறுத்துகின்றனர்.


கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது பல்வேறு உயர் அதிகாரிகள் வழக்குகளை கைவிட அறிவுறுத்துகின்றனர். ஜாதி கலவரத்தை தூண்டி விடுவதாக என் மீது தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இரு தரப்பு மோதலை தடுத்து சமாதனம் செய்யவே மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் காவல்துறை அனுமதியுடன் பாவூர்சத்திரம் சென்றேன். என்மீது ஜாதி  சாயம் பூசி கலங்கம் ஏற்படுத்திட முயற்சித்து வருகின்றனர். நான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நேரத்தில் அம்பாசமுத்திரம் சம்பவத்தில் பல் பிடுங்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாக அவர் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். எனது தரப்பினர் சிபிசிஐடி அலுவலக விசாரணைக்கு வராத நிலையில் அவசர கதியில் ஏன் விசாரணை நடத்தப்பட்டது. அதிலும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என தெரிகிறது. அம்பாசமுத்திரம் உட்கோட்ட பகுதியில் 24 போலீசார்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது விந்தையாக உள்ளது. இது  அவர்களுக்கு வழங்கப்பட்ட  தண்டனை அல்ல, பரிசு. இந்த விவகாரத்தில் தொடர்பில் இருந்த நபர்களை மண்டலம் விட்டு மண்டலம் மாற்றம் செய்ய கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒரே மாவட்டத்தில் அருகிலுள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்துள்ளனர்.


அம்பாசமுத்திரம் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்வீர் சிங் என்னை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பேசினார். முதலில் என்னால் அவரது அழைப்பை எடுக்கமுடியாததால் அவரை மீண்டும் தொடர்பு கொண்டேன். எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். எதிர்காலத்தில் நண்பர்களாக இருக்கலாம் என தெரிவித்தார். சில  அதிகாரிகள் சில தகவல்களை சொல்வார்கள் அதனை கேட்டு இருந்துகோங்க என அவர்  சொன்னார். ஆனால் இது குறித்து முழு தகவலையும் தற்போது பத்திரிகையாளரிடம் தெரிவிக்க முடியாது. நீதிமன்றத்தில் இது குறித்து முழு தகவலையும் தெரிவித்துள்ளேன். ஏ எஸ் பி உள்ளிட்ட குற்றம் சாட்டபட்டவர்களை கைது செய்துவிட்டுதான் விசாரணை நடத்தியிருக்கவேண்டும். சாத்தான்குளம் வழக்கில் அவ்வாறு தான் நடந்தது. பல்வீர் சிங்க்கு சம்மன் அனுப்பி அவரை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கவேண்டும். அவர்களால் பல்வீர் சிங்கை சம்மன் அனுப்பி விசாரிக்க முடியாது. சிபிசிஐடி விசாரணை என்பது வெறும்  கண்துடைப்பு. சிபிசிஐடி ஆய்வாளர் தலைமையில் விசாரணை என்பது சரியாக இருக்காது. என் மீது வழக்கு பதிவு செய்து மிரட்டி என்னை அவர்கள் வசபடுத்த நினைக்கின்றனர். சிபிசிஐடி போலீஸ் விசாரணை மீது நம்பிக்கை இல்லை.  சிபிஐ விசாரணை தேவை அவர்கள் நியாயமாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம். அம்பை விவகாரத்தில் அனைத்து தடையங்களையும் அழிக்கவே இரண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பல்பிடுங்கப்பட்ட சம்பவத்தில்  சிபிஐ விசாரணை வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.