கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை  பிடிக்கப்பட்டு, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் கடந்த  ஜூன் 5- ந் தேதி விடப்பட்டது. அதன் பின்னர் அன்று முதல் வனத்துறை அதிகாரிகள் மூலம் அதன் கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலர் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாடியுள்ளது. தொடர்ந்து நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அரிக்கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது குறித்து அங்குள்ள மக்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அதே போல் இன்று காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் அறிந்தனர். அங்குள்ள கதவுகளையும் சேதப்படுத்தியாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அதனை வனத்துக்குள் விரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


குறிப்பாக  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தாண்டிய அடர் வனப்பகுதிகள் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு தற்போது மதம் பிடித்துள்ளது. தற்போது அந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும். இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும். தற்போது யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழும் ஊத்து மலைப்பகுதியில் திரிகிறது. மாஞ்சோலை அடுத்துள்ள நாலுமுக்கு மற்றும் காக்காச்சி என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் மேலும் ஒரு யானை கூட்டம் வந்துள்ளது.  அந்த யானைக் கூட்டத்தையும், அரிக்கொம்பன் யானையையும் கட்டுப்படுத்தி மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் தலைமையில் வனத்துறையினர் 40 பேர் ஈடுபட்டுள்ளனர் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் இணை இயக்குனர் செண்பகப்பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.


இதனிடையே அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தை தொடர்ந்து மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, குதிரை வெட்டி சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி மற்றும் இதர பகுதிகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை இல்லை எனவும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிக்கொம்பன் யானை தற்போது ஊருக்குள் புகுந்த நிலையிலும் அதற்கு மதம் பிடித்துள்ளதும் மலைக்கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.