தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு மாவட்ட வாரியாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் பணியை நேற்றைய தினம் தொடங்கியுள்ளது.தமிழக சட்டபேரவை அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற மனுக்கள் குழு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 நாள் பயணமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான ஆய்வு பணியினை மனுக்கள் குழுவினர் மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 263 மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த துறை சார்ந்த அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறும் பொழுது,




தமிழக சட்டமன்ற  மனுக்கள் குழு   கூடி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி இதுவரை 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இரண்டு தினங்களாக நடந்த மனுக்கள் மீதான ஆய்வு கூட்டத்தில் பொது மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, நெல்லை மாவட்டத்தில் பெறப்பட்ட 263 மனுக்களில் 74 மனுக்கு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது 7 மனுக்களை மீண்டும் மறு ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் சமுதாய நலக்கூடம்  அமைத்தல், கழிப்பறை, சாலை மேம்பாடு உள்ளிட்டவைகளில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்ய மனுக்கள் குழு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களை மாதம் 2 மாவட்டம் வீதம் ஆய்வு செய்ய மனுக்கள் குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த கட்டமாக கோவை,  நீலகிரி மாவட்டங்களிலும் அதனை தொடர்ந்து கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கவும், தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மனுக்கள் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி,கே.பி.சங்கர், கிரி, மதியழகன்,சந்திரன் ,மாங்குடி மற்றும் பிரபாகர ராஜா , மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மனுதாரர்கள்   கலந்து கொண்டனர்