தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா. மணிமண்டபத்தில் உள்ள நினைவரங்கத்தில் நடைபெற்ற கலை இலக்கிய மாலை நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி  அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் துமிடி இசை வெள்ளத்தில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் நினைவாக கோவில்பட்டியில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.




இந்நிலையில் இரவில் கி.ரா. நினைவரங்கத்தில் கலை, இலக்கிய மாலை நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். கட்சி வேறுபாடு இன்றி கலந்து கொண்ட விழாவில் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டனர்.




விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோவில்பட்டி மணல்மகுடி நாடக நிலம் வழங்கிய துமிடி இசை நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது. விழாவில் கனிமொழி எம்.பி பேசுகையில், “கேரளா போன்று தமிழகத்தில் இலக்கியவாதிகளை கொண்டாடக்கூடிய நிலை இல்லை என்று ஏங்கி இருக்கிறோம். ஆனால் இன்று தமிழக அரசு கி.ராவிற்கு மரியாதை செலுத்த கூடிய வாய்ப்பினை உருவாக்கி கொடுத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கி.ரா மனிதர்களை நேசிக்க கூடிய ஒருவர், எல்லாரையும் நேசிக்க கூடிய மனிதர். அவருடைய விழாவில் இன்றைக்கு மிகச்சிறப்பாக கட்சி வேறுபாடுகளை கடந்து கலந்து கொண்டு இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.




விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில், “கி.ராவிற்கான மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து சிறப்பாக செய்துள்ளனர். அந்த வகையில் இந்த மண்ணிற்கு சொந்தக்காரர் என்பதில் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஒருவர் சிறப்பாக வாழ்ந்தார் என்பதை அவரும் வாழ்கின்ற நேரத்தை விட இறந்த பின்னர் தான் அவருடைய சிறப்பு புலப்படும். தமிழர் பண்பாட்டினை காக்க படுப்பட்டவர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்” என்று கூறினார்.




விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “இந்தியாவில் இந்த அளவிற்கு ஒரு எழுத்தாளரை பெருமைப்படுத்தியது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். வாசிப்பு திறனை வளர்க்க தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.