தூத்துக்குடியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் தருவைகுளம் சூழல்சார் சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுப்பட்டுள்ளது. கண்ணாடி இழை படகில் சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் அழைத்துச் சென்று கடல்வாழ் உயிரினங்களை நேரடியாகக் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அரசின் நிதி வருவாய்க்கு மற்ற அரசு துறைகளுக்கு இணையாக வசூல் ஈட்டித்தருவது சுற்றுலாத் துறை. தமிழ்நாட்டின் தொன்மையான வரலாறும் அது சார்ந்த இடங்களும் சுற்றுலாத் தலங்களாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையின்போது நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவித்து வருகிறது.




காலநிலைக்கு ஏற்ப சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் வரிசையில் சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம் கடற்கரை, கோடை காலத்திற்கு ஏற்ற இடமான ஊட்டி, கொடைக்கானல் எனப் பல உள்ளன. அதற்கு அடுத்ததாக ஆன்மிகத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களை ஒருங்கே பெற்றுள்ள மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது.




அரசின் நேரடி தலையீடின்றி முதல் பூங்கா வனத்துறை சார்பில் தேசிய அளவில் நடந்தப்பட்ட ஆய்வுப் பட்டியலில் சிறந்த சூழல் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்க சுற்றுலாத் தலமாக தருவைகுளம் கடற்கரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கடற்கரைப் பகுதியை அழகுப்படுத்துவதற்காக பாதாம், சவுக்கு, பிசின், ஊசியிலை மரங்கள் நடப்பட்டு பசுமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சூழல் சுற்றுலா துவக்கப்பட்டது. தருவைகுளம் பங்கு தந்தை வின்செண்ட் கண்ணாடி இழைப்படகு சுற்றுலாவை துவக்கி வைத்தார்.




தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதியில் வளரும் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் புற்கள், கடல் விலாங்கு, கடற்குதிரை, வண்ண மீன்கள், கடல் விசிறி, கடல் பஞ்சு, கடல் பாசி, நட்சத்திரமீன், கடல் தாமரை, கடல் அட்டை, சங்கு வகைகள் உள்பட பல்வேறு வகை உயிரினங்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாகக் கண்டுகளிக்கும் வகையில் படகின் அடிப்பாகத்தில் கண்ணாடி இழை பொருத்தப்பட்டு கடலுக்குள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும்விதமாக தருவைகுளம் கடற்கரை முழுவதும் நெகிழிப் பயன்பாடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வன அலுவலர் கூறுகையில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நேரடியாக அரசின் தலையீடின்றி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக சமூக வளர்ச்சி கண்ணோட்டத்தோடு தருவைகுளம் சூழல்சார் பல்லுயிர் பெருக்க சுற்றுலா கடற்கரை பூங்கா செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தருவைகுளம் கடற்கரை முழுவதுமாக கிராம குழுவினர் மூலமாக நிர்வகிக்கப்படும். கடலுக்குள் சுற்றுலா செல்ல ஏற்பாடு தருவைகுளம் சூழல்சார் கடற்கரைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.




தருவைகுளம் சூழல்சார் கடற்கரைப் பூங்கா அமைக்கப்படுபட்டு உள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழல் சுற்றுலாவின் மூலம் கண்ணாடி இழை படகில் கடலுக்குள் 2 km தொலைவில் போன்ற கடல் வாழ் உயிரினங்களை கண்டு மகிழலாம். இந்த சுற்றுலாவை 8681020780 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். இதில் மேலும் கடலுக்கு அடியில் snorkelling மற்றும் scuba diving மூலமாகவும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.