நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் மாநகராட்சியின் ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நான்கு மண்டல துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திருக்குறள் வாசித்தபடி மேயர் சரவணன் கூட்டத்தில் தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதல்வரின் அறிவித்தபடி நெல்லை மாநகராட்சியில் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக மூன்று ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் 34 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.




பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட சாலைகளில் 42 கோடி ரூபாயில் புதிய சாலைகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் திட்ட பணிகள் முடிவடையாததால் பொதுமக்களின் அவசர போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு 12 இடங்களில் மாற்று சாலைகள் போடப்படும். மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படும். அதேபோல் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெறும்.




பருவமழை நேரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே நெல்லை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நான்கு மண்டலங்களிலும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு டெங்கு இல்லா மாநகராட்சியாக உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பொதுமக்கள் பிரச்னை குறித்து பேசினர். கூட்டத்தில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பான தீர்மானங்கள் சுமூகமாக நிறைவேற்றப்பட்டது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண