பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக அரசு சார்பில் 15 ஆயிரம் டன் அரிசி, பால்பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் இன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.




இதையடுத்து புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, இலங்கைக்கு அனுப்புவதற்காக 30 ஆயிரம் டன் அரிசி தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அரிசியை தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய 10 கிலோ பைகளில் நிரப்பி, 5 பைகளை ஒரு பண்டலாக பொட்டலமிடும் பணி தூத்துக்குடி துறைமுக பகுதியில் உள்ள 3 கிடங்குகளில் கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. மேலும், இலங்கைக்கு அனுப்புவதற்காக 250 டன் எடையுள்ள பால்பவுடர், சுமார் 50 டன் எடையுள்ள மருந்து பொருட்களும் கொண்டுவரப்பட்டு, அனைத்தும் முறையாக பேக்கிங் செய்யப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு முதல் கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த கப்பலில் 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது.




15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு சென்றது. இந்த கப்பலை தமிழக உணவு துறை அமைச்சர் ர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.




பின்னர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்  செஞ்சி கே.எஸ். மஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாவது கட்டமாக இன்று இந்த கப்பலில் 48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14700 டன் அரிசி, 7 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பொருட்கள், 15 கோடி மதிப்பிலான 50 டன் மருந்து பொருட்கள்  என மொத்தம் 61 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் கட்டமாக பொருட்கள் அனுப்பப்படும் என்றார்.