ராமநாதபுரம் மாவட்டத்தில்,கடந்த சில வாரங்களாக கோடையை மிஞ்சும் அளவிற்கு கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் காரணமாக ஆற்றுப்படுகைகள், குளங்கள், கண்மாய் பகுதிகளில் தண்ணீரின் இருப்பளவு வெகுவாக குறைந்து வறட்சியின் சுவடுகளாக பிரதிபலித்தன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.மேலும் தண்ணீருக்காக காலிக்குடங்களுடன் தவமிருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 



இந்த நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் கூட இன்னும் 119 கிராம மக்கள் தினமும் குடிநீா் கிடைக்காமல் தவித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. அவா்களுக்கான புதிய குடிநீா் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் ரூ.616 கோடியில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு முத்தரசநல்லூா் காவிரி ஆற்றில் 4 கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 1,332 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கத் திட்டமிடப்பட்டது.



திருச்சி பகுதியில் இருந்து சுமாா் 280 கிலோ மீட்டருக்கு மின்மோட்டாா் மற்றும் தானாகவே தண்ணீா் செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மட்டும் தினமும் 78 மில்லியன் லிட்டா், அதாவது 780 லட்சம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டது. மாவட்டத்துக்கான 780 லட்சம் லிட்டா் தண்ணீரில், ராமநாதபுரம் நகராட்சிக்கு மட்டும் தினமும் 56 லட்சம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக நகரில் 8 மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.


காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் கோடை காலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீா் விநியோகம் மிகக் குறைந்தே காணப்படுகிறது. திருச்சி பகுதியில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட கிணறுகளில் இருந்தே தினமும் 715 லட்சம் லிட்டா் தண்ணீரே விநியோகிக்கப்படுகிறது. அதன்படி 65 லட்சம் லிட்டா் தண்ணீா் குறைகிறது. அப்படி குறைந்து வரும் தண்ணீரும் முறையாக முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. குழாய் உடைப்பு, குடிநீா் திருட்டு என சுமாா் 50 லட்சம் லிட்டா் தண்ணீா் முறையின்றி செல்கிறது. ஆகவே தினமும் 1 கோடி லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படாமலே உள்ளது.



ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளுக்கும் 23 லட்சம் லிட்டா் தண்ணீா் பற்றாக்குறை தினமும் ஏற்படுகிறது. இதனால், வாரத்தில் 3 நாள்கள் என்ற அடிப்படையிலேயே தண்ணீா் விநியோகிக்கப்பட்டுவருகிறது. குறைந்து வரும் தண்ணீரால் ராமநாதபுரம் நகராட்சிக்கு கிடைக்கவேண்டிய 56 லட்சம் லிட்டரில் அதிகபட்சமாக 33 லட்சம் லிட்டா் தண்ணீரே விநியோகிக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் 2,332 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 2,213 கிராமங்களே குடிநீா் இணைப்பு பெற்றுள்ளன. அதனடிப்படையில் மாவட்டத்தில் 119 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டங்களில் கூட தண்ணீா் வழங்கப்படாமலே உள்ளன.



திருப்புல்லாணி, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப்படி பல கிராமங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கப்படாத நிலையுள்ளதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா். கூட்டுக்குடிநீா் இல்லாத நிலையில், நிலத்தடி நீா் உப்பாக இருந்தாலும் அதையே குடிநீராகப் பயன்படுத்தும் கட்டாயத்திலும் மக்கள் உள்ளனா். அப்படி பயன்படுத்துவோரில் பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பும் இருப்பது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப்படி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.



இப்பிரச்னை குறித்து ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான காவிரி கூட்டுக்குடிநீா் திட்ட ஆற்றுக் கிணறுகள் தூா்வாரப்பட்டு தற்போது 4 ஆயிரம் லிட்டா் கூடுதலாகவே கிடைத்துவருகிறது. மேலும் விரைவில் மேட்டூரிலிருந்து புதிய குடிநீா் திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிநீா் பிரச்னை தீா்ந்துவிடும் என தெரிவித்துள்ளனர்.