தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு, சத்யா நகர் உப்பளம் அருகே ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் திருமுருகன் காவல் துணை ஆய்வாளர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 45 வயது இருக்கும். முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் ஏ.எஸ்.பி. மதன் பார்வையிட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், போலீசார் செய்த விசாரணையில் தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்த கண்ணன் மகன் சீனு (வயது 23). இவர் தனது நண்பர்களான தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ்(20), ஜார்ஜ் ரோட்டைச் சேர்ந்த ஜவகர் மகன் ஆகாஷ்(20) உள்ளிட்ட 6 பேருடன் கடந்த 24-ம் தேதி இரவு நடந்த கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் அவர்கள் அனைவரும் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சத்யாநகர் உப்பளத்தில் வைத்து மதுபானம் அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முகேஷ் உட்பட 6 பேரும் சேர்ந்து சீனுவை சரமாரியாக அரிவாளால் தாக்கி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முகேஷ், ஆகாஷ் மற்றும் 4 இளஞ்சிறார்கள் என 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.