திருச்செந்தூரில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33) என்பவர்  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். இவரது கணவர் கூலி வேலை செய்துவருகிறார். பிரேமலதா 7 மாத நிறைமாத கர்ப்பிணியான இவர் கோவிலில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவருகிறார். இந்தநிலையில் இன்று கோவிலில் இருந்து தமிழ்நாடு ஹோட்டல் அருகே நடந்து வந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் சாலை நடைபாதையில் அமர்ந்த அவருக்கு அழகான  ஆண் குழந்தை பிறந்துள்ளது.




இதனை பார்த்த பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு தாயும், குழந்தையும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு போதிய வசதி இல்லாதால்  மேல் சிகிச்சைக்காக குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனயில் குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் இல்லாததால், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு பச்சிளங்குழந்தைகள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு   மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தாயும் , குழந்தையும் அனுப்பி வைக்கப்பட்டனர்.




திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு குழந்தைகள் கொண்டு செல்வதற்கு அதற்கான வசதிகள் கொண்ட உரிய ஆம்புலன்ஸ் திருச்செந்தூரில் இல்லாததால் சில நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய சிறப்பு பச்சிளங்குழந்தைகளுக்கான  ஆம்புலன்ஸ் வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.