இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்தனர்.




கடந்த மாதம் 21 மற்றும் 23ஆம் தேதிகளில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளிள் தருவைகுளம், வேம்பார், வைப்பார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு மன்னர் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் படகில் ஏறி விசாரணை நடத்தினர். பின்னர் இரண்டு விசைப்படகுகளும் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறை பிடித்து இலங்கை துறைமுகத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அழைத்துச் சென்றனர்.




இதைத் தொடர்ந்து  சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களை இலங்கை கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை அடுத்து வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை 22 மீனவர்களையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 22 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.




இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படைகுகளையும் மீட்டு நடவடிக்கை எடுக்க கோரி ஏற்கனவே கடந்த ஆறாம் தேதி தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து மனு அளித்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக மீனவத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு தகவல் அளித்தனர்.




ஆனால் மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 22 மீனவ குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குடும்பத்தினர் தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு  22 மீனவர்கள் மற்றும் பிடிக்கப்பட்ட விசைப்படகுகளை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர்.


இதனை தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஆட்சியர், மீனவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் விரைவில் மீனவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தார்.