விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேகமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.




ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள், மான்கள், ராஜநாகங்கள், பெரிய அளவிலான மலைப் பாம்புகள், காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த  வனவிலங்குகளை வனத்துறையினர் தொடர்ந்து  கணக்கெடுக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வரையாடுகள், சாம்பல் நிற அணில்கள், பறவைகள், யானைகள் கணக்கெடுப்பு முடிவுற்றது.




அந்த வகையில் நேற்று முதல் 8 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. முதல் நாளான நேற்று  ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற ஊன் உன்னிகள் மற்றும் தாவர உன்னிகளான மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கணக்கெடுப்பது குறித்து வனத்துறையினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது .




ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சுமார் 42 பீட்டுகள் உள்ளன. இந்த 42 பீட்டுகளுக்கும் வனத்துறையினருக்கு நேற்று பயிற்சி நிறைவு பெற்ற நிலையில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணிக்கு இன்று முதல் சென்று  புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை, சதுரகிரி மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.




முதல் மூன்று நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வனப்பகுதியில் தினமும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். மேலும் வனவிலங்குகளின் தடயங்கள், எச்சங்கள் ஆகியவற்றையும் சேகரிக்கின்றனர். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு நேர்கோட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த கணக்கெடுக்கும் பணியின் போது வனத்துறையினர் தங்கள் பகுதியில் புலிகள் வசிக்கும் இடங்களை தேர்வு செய்த பின்னர் அதன் நடமாட்டத்தை அறிந்து அடர்த்தியான வனப்பகுதியில் கேமராக்களும் பொருத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.