அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை வருகிற  31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்.




தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90  கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.




இந்நிலையில் வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், மற்றும் அவரது தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகினர்.




இந்த வழக்கில் மொத்தம் 108 சாட்சிகள் அரசு தரப்பான லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இன்று வழக்கு விசாரணைக்காக தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஆதி திராவிட நலத்துறை அலுவலராக பணிபுரிந்து  வருபவரும் வாக்குப்பதிவின்போது தூத்துக்குடியில் துணை வட்டாட்சியராக இருந்த சுரேஷ் மற்றும் தற்போது ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவரும்  வாக்குப்பதிவின்போது கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த மைதிலி ஆகியோரிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்.