தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூர்,, வைப்பார், நாகலாபுரம், புதூர் மற்றும் விளாத்திகுளத்தில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அமைச்சர் கீதா ஜீவன்,, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




விளாத்திகுளத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசுகையில் ”கட்டணமில்லா விடியல் பயணத்திட்டத்தை தந்தது திமுக ஆட்சி. இதனால் மாதம் தோறும் பெண்கள் 800ரூ சேமிக்கும் நிலை உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் முகாம் அமைத்து விடுபட்ட குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். முதியவர்கள் வீட்டில் சிகிச்சை பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலையில் குழந்தைகள் பசியோடு இருக்க கூடாது என்று காலை உணவு திட்டத்தை தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் . இந்த திட்டம் தற்போது கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.




திராவிட மாடல் என்றால் பாஜகவிற்கு அதிரும்தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகள் பாஜக மற்றும் தமிழக ஆளுநருக்கு பிடிக்காது. தற்போது தான் தமிழ் படிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வருத்தப்படுகிறார். எங்களை ஹிந்தி படிக்க சொல்லும் பிரதமர் நரேந்திர மோடி - தமிழ் கற்றுக் கொள்ளுங்கள், தேர்தல் முடிந்த பிறகு வேறு ஆட்சி வந்துவிடும் அப்போது பிரதமர் நரேந்திர மோடி சும்மா தான் இருப்பார். அப்போது நமது முதல்வரிடம் சொல்லி நல்ல தமிழ் ஆசிரியரை கொண்டு தமிழ் கற்றுக் கொடுக்க சொல்வோம். தமிழ் மேல் பாசம் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது வரவில்லை, கேட்ட நிவாரணம் தரவில்லை, தேர்தல் வந்ததும் தமிழகத்திற்கு அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இங்கேயே இருந்தாலும் வாக்கு கிடையாது. தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டு இருக்கின்றனர். சாதி, மதம் என மக்களை பிரித்து பிரச்சினைகளை உருவாக்கி விடுவார்கள்.




உதாரணம் மணிப்பூர் பிரச்சினை - உலகம் முழுவதும் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்லவில்லை. இதற்கு காரணம் பாஜகவின் அரசியல் தான். ஆகையால் தான் பாஜகவினை வீழ்த்த வேண்டும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு மீண்டும் வந்தால் அனைத்து கல்லூரியில் நுழைவு தேர்வு கொண்டு வந்து விடுவார்கள் - நமது குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும்” என்றார்




கனிமொழி பேசும் போது கூட்டத்தில் ஒரு பெண்மணி தனக்கு 100நாள் வேலையில் ஊதியம் வரவில்லை என்றார். அம்மா 100நாள் வேலைக்கு பிரதமர் நரேந்திர மோடி சரியாக பணம் தரவில்லை. ஆட்சி மாறியதும் வழங்கப்படும் என்றார்