தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர்.செ.ராஜீ, சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆகியோர் கொளுத்தும் வெயிலில் மேளம் தளம் முழங்க பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர். வெயிலில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி , முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீக்கு பொதுமக்கள் பதநீர் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தில் பிரத்தனை செய்து, ஆலய பங்கு தந்தையிடம் அதிமுக வேட்பாளர் ஆசி பெற்றார்.இதையெடுத்து கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.




அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான 3வது அணியை பற்றி நமக்கு கவலையில்லை. அதிமுகவிற்கு எதிரி திமுக தான். திமுக அதிமுகவிற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே எதிரி தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், சட்டமன்ற தேர்தலின் போதும், தமிழகத்தில் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாகி விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தததும் தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்று கனிமொழி தெரிவித்தார். ஆனால் டாஸ்மாக் எண்ணிக்கை அதிகரித்து மட்டுமின்றி, பூங்கா, பெரிய வணிக வளாகங்களில் மது விற்கும் நிலை தான் உள்ளது. அது மட்டுமில்லை டாஸ்மாக்கில் நிர்ணயம் செய்த விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கியதால் அந்த துறை அமைச்சருக்கு 10ரூபாய் பாலாஜி என்ற பெயரும் வந்தது. இதில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாரித்து திமுக குடும்பத்திற்கு கொடுத்து விட்டு தற்பொழுது சிறையில் உள்ளார்.




தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தாரளமாக கிடைக்கிறது. போதை பொருள் கடத்தல் செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜபார்சாதிக்வுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்ள புகைப்படங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் பெட்டிக்கடை வரை போதை பொருள் தாரளமாக கிடைக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மின்சாரத்தினை தொட்டால் ஷாக் அடிக்கும் அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.




சட்டவிரோமாக சம்பாதித்த பணத்தை வைத்து இந்த தேர்தலில் ரூ.200 முதல் 500வரை ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்க திமுக நினைக்கிறது. திமுக கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள், தமிழகம் நலன் குறித்து வைத்த கோரிக்கைகள் குறித்து காது கொடுத்து கேட்கவில்லை என்பதால் தான் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்தோம். பாஜக, காங்கிரஸ் என எந்த தேசிய கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்று வெளியே வந்து நம்மை விரும்பியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2011ல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தன. அப்போது இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைப்போன்ற தற்பொழுதும் கூட்டணி அமைத்து இருப்பதால் இது வெற்றிக்கூட்டணி என்றார்.