வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீசன் முடிவுக்கு வந்துள்ளது. 


 

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இந்த உப்பளங்களை நம்பி சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி பணிகள் நடந்து வருகிறது. இங்கு  ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்கள் தான் உப்பு உற்பத்தி மிக அதிகமாக நடைபெறும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவுக்கு வரும்.

 

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குறித்த காலத்தில் உப்பு உற்பத்தி தொடங்கவில்லை. மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கியது.அது போல மே மாதத்தில் 2 வாரங்கள் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 15 நாட்களுக்கு மேலாக உப்பு உற்பத்தி நடைபெறவில்லை.


                                  

 

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் என்பதால் இந்த காலத்தில் உப்பு உற்பத்தி நடைபெறாது. இதையடுத்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட்டுகளை போட்டும், தென்னங் கீற்றுகளாலும் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.


                                  

 

இது குறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. பெரிய அளவிலான உப்பளங்களில் 65 சதவீதம் அளவுக்கு தான் உற்பத்தி நடந்துள்ளது. சில சிறிய உப்பளங்களில் 70 சதவீதம் வரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 17 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகி உள்ளது. இதில் இதுவரை 50 சதவீத உப்பு விற்பனையாகி விட்டது. 50 சதவீத உப்பு கையிருப்பில் உள்ளது. இது வரும் ஜனவரி மாதம் கடைசி வரை போதுமானதாக இருக்கும். இந்த ஆண்டு உப்புக்கு நல்ல விலை கிடைக்கிறது. தற்போது ஒரு டன் உப்பு 2700 ரூபாய் வரை விலை போகிறது. உப்பு உற்பத்தி குறைந்தாலும் விலை ஓரளவுக்கு நன்றாக இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு நஷ்டம் ஏதும் இல்லை என்றனர்.


                                  

 

உப்பள தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மழை காலத்தில் வேலை இல்லாததால் பெரிதும் வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனர், தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து இருப்பது தொழிலாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது, இருந்த போதிலும் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இந்தாண்டே உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் உப்பள தொழிலாளர்கள்.