திருவாரூர் தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மேலும் திருச்செந்தூர் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது



இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில்  மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேலும் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருவதால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



 

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக  சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் மழை பெய்து வருவதால் பயிர்கள் அனைத்தும்  மழை நீரில் மூழ்கி வருகிறது ஆகையால் மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் வேளாண் துறை பொதுப்பணித் துறை ஊழியர்களை கொண்டு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்து தரவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.