டெல்டா மாவட்டங்களில் பிரதான சாகுபடி நெல் சாகுபடி ஆகும். ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீர் போதிய அளவு வராத காரணத்தினால் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. மேலும் நெல் சாகுபடியை தவிர்த்து குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக பணப் பயிரான பருத்தி சாகுபடியில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கிய ஆலோசனையின்படி பணப் பயிரான பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மேலும் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரின் அளவைவிட குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால் மூன்று அறுவடை செய்து  விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல், வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை விற்பனை செய்து வருவது வழக்கம்.

 

அதனையொட்டி இந்த ஆண்டு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை தற்போது அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 8700 ரூபாய் வரை அதிகபட்சமாக விலை போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை 15 வாரங்கள் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் குவிண்டாலுக்கு மேல் மேல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில்முருகன் தெரிவித்தார்.



 

பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்காண்டு பருத்தி விலை பிரச்சினை காரணமாக தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். ஆகையால் விவசாயிகள் தாங்கள் செய்த செலவு பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி நல்ல முறையில் விளைச்சல் கண்டுள்ளது. அதேநேரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதிக விலைக்கு விற்பனையாகி வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆண்டுதோறும் இதேபோன்று பருத்திக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாக அமையும் என தெரிவித்தனர்.