சத்குரு:


உலகிலேயே திராவிட மக்களிடம் இருப்பதை போன்ற ஆழமானபக்தியுணர்வு வேறஎங்கும் இல்லை. இங்கு நாம் நம் வீடுகளைகட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டவில்லை. நகரின் மையபகுதியில் முதலில் கோவில் கட்டிவிட்டு அதன் பிறகே வீடுகளையும் மற்ற கட்டிடங்களையும் கட்டினோம். பல இடங்களில் அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கூட எங்கு இருந்தது என நம்மால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் கட்டிய கோவில்கள் பலநூறு வருடங்களையும் தாண்டி நிலைத்துநிற்கிறது. இதுதான் திராவிட கலாச்சாரத்தின் சிறப்பு.




நெஞ்சம் நிறைந்தபக்தி


புகழ்பெற்ற ராஜராஜசோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலை உதாரணமாக எடுத்துகொள்ளுங்கள். இப்போது நம்மிடம் லாரி, டிரக் போன்ற வாகனங்கள், கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அனைத்து நவீன தொழில் நுட்பங்களும் இருக்கின்றன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எந்த ஒரு நவீன கருவிகளும் இல்லாமல் இவ்வளவு பிரமாண்டமான கோவில்களைகட்டியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும், வெறும்கரங்களால் கருங்கலில் சிலைவடிவப்பதும், கட்டிடங்கள் கட்டுவதும் எளிதான காரியம் இல்லை. இவ்வளவு மகத்தான கட்டிட கலையை பார்க்கும் போது நம் தமிழ் மக்கள் எந்தளவுக்கு நெஞ்சில் பக்தியும், திறமை மற்றும் புத்தி கூர்மையுடன் வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிபாருங்கள்.


நம்மால் அது போன்ற கோவில்களை புதிதாக கட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் கட்டிய கோவில்களையாவது முறையாக பாதுகாக்க வேண்டாமா? ராஜராஜசோழனையை விட நீங்கள் மிகப் பெரிய திராவிடரா?, நாயன்மார்களையும் அகத்தியரையும் விட நீங்கள் மிகப் பெரிய திராவிடரா? திராவிடர் என்றாலே பக்தன்தான். பக்தி இல்லாமல் திராவிடம் இல்லை. கோவில்கள் இல்லாமல் திராவிடகலாச்சாரம் இல்லை.




தமிழ்கலாச்சாரத்தின் மூலம்


குறிப்பாக, தமிழ்கலாச்சாரத்தின் மூலமே கோவில்கள்தான். ஏராளமான கலைகளும் இலக்கியமும் கோவில்களில் தான் உருவெடுத்தன. தமிழ் இலக்கியத்தில் பெரும்பகுதி பக்தி இலக்கியமாக தானே உள்ளது?


இவ்வளவு சிறப்புமிக்க கோவில்களை ‘மதசார்பற்ற’ அரசின்கட்டுப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகிறார்கள். கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலங்களும், இரண்டேகால்கோடி சதுர அடிபரப்பிலான கட்டிடங்களை வைத்து கொண்டு ஆண்டுக்கு வெறும் ரூ.126 கோடிமட்டுமே வருமானம் கிடைப்பதாக இந்து அறநிலையத்துறை கணக்கு சொல்கிறது.




ஆக்கிரமிப்பில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தற்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு ஏக்கர் நிலத்தை குறைந்தப்பட்சமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு குத்தகைக்கு விட்டாலும், பல ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைக்கும். அந்த 5 லட்சம் ஏக்கரில் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அரசாங்கம் இதை மீட்பதற்கு பதிலாக, ஆக்கிரமிப்பாளர்களிடமே வழங்குவதற்கு முயற்சிகள் எடுத்துவருகிறது. நீதிமன்றத்தின் தலையீட்டால் இது நிறுத்திவைக்கபப்ட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை செய்த பல தவறுகளை சென்னை உயர்நீதிமன்றம் பலவழக்குகளில் வன்மையாக கண்டித்துள்ளது.


இந்துக்களில் நேர்மையானவர்கள் இல்லையா?


கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து பக்தர்களிடம் கொடுங்கள் என நான் சொன்னால், யாரிடம் கொடுப்பீர்கள், அவர்கள் முறைகேடுகள் செய்யமாட்டார்களா? என கேள்வி எழுப்பிகிறார்கள். இதே கேள்வியை மற்ற மதத்தினரிடம் கேட்பதற்கு ஏன் யாருக்கும் தைரியம் இருப்பதில்லை. கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம் போன்ற பிற மதத்தினர் அவரவர் கோவில்களை அவர்களே சுதந்திரமாக நிர்வகிக்கின்றனர். அதேபோல், இந்துக்களால் நிர்வகிக்க முடியாதா? 87 சதவீதம் மக்கள்தொகைகொண்ட ஒரு பெரும்பான்மை சமூகத்தில் 25 பேர் கூட நேர்மையான, திறமையான நபர்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அதேபோல், கோவில்களை பக்தர்களிடம் கொடுத்தால் ஜாதி பிரச்சினை உருவாகும், அவைகுறிப்பிட்ட சமூகத்தின் கையில் செல்லும் என சிலர் கூறுகின்றனர். தொடர் படையெடுப்புகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் நம் கலாச்சாரத்தில் சில விரும்பதகாத மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் துரதிர்ஷ்டவசமாக ஜாதிய பாகுபாடும் ஒன்று. இதை சரி செய்வதற்காகவே, நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் பல சட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டன.




நம் நாட்டில் முன்பு தொழில்களின் அடிப்படையில் ஜாதிகள் உருவாகின. அப்போது ராணுவத்தில் சேரவேண்டும் என்றால், அவர் கட்டாயம் ஷத்ரியனாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. முறையான பயிற்சியும், தேசத்திற்காக உயிரையே கொடுக்கும் உணர்வும் இருக்கும் யார் வேண்டுமானால் ராணுவத்தில் சேரமுடியும். அதேபோல், எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் நெஞ்சம் நிறைந்த பக்தி இருந்தால், அவருக்கு முறையான பயிற்சி அளித்து அர்ச்சகர் ஆக்கவேண்டும். இதைத்தான் இப்போது இளையதலைமுறையினரும் விரும்புகின்றனர்.


இந்தியா முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. இதில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியும் விதிவிலக்கல்ல. இதில் முதல் கட்டமாக, உத்தரகாண்ட மாநில அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று 51 கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு.




இதே போல் மற்ற மாநில அரசுகளும் கோவில்களை விடுவிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அரசும் இதை அறிவிக்கவேண்டும்.


கட்டுரையாளர் – சத்குரு ஜக்கி வாசுதேவ், ஈஷா அறக்கட்டளை நிறுவனர்