காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும், பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால் மூன்று போகம் சாகுபடி என்பது ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மூன்று போக சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 160 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் சம்பா, தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் உரங்கள் தட்டுப்பாடு காரணமாக நெல் மணிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல் பயிர்களில் சாய்ந்து மீண்டும் பாதிக்கப்பட்டன.




பல இடங்களில் வயல்களில் தேங்கிய மழைநீரில் பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறுவை அறுவடையின்போது பெய்த கனமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சம்பா அறுவடையின் போது மழையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில் 15 முதல் 18 மூட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழை காரணமாக கூடுதலாக செலவு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்டோம் ஆனால் தற்போது மகசூலில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவே அரசு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்