தஞ்சை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்திடமிருந்து மாவட்ட செயலாளர் பதவியை பறித்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த கல்யாணசுந்தரத்தை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். அவருக்கு பதிலாக கும்பகோணம் எம்.எல்.ஏ ‘சாக்கோட்டை’ அன்பழகனை தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்.

Continues below advertisement

கல்யாணசுந்தரம் நீக்கம் ஏன் ?

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து வரும் நிலையில், சரியாக செயல்படாத நிர்வாகிகள் உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மீது அடுக்கடுக்கான புகார்கள் திமுக தலைமைக்கு சென்ற நிலையில், அவரது பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் பெயரில் அறிக்கை வெளிவந்தாலும், இந்த முடிவை எடுத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் – தான்.

Continues below advertisement

அதிருப்தியை ஏற்படுத்திய கல்யாணசுந்தரத்தின் செயல்பாடுகள்

மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதில் கோட்டை விட்டது, தன்னுடைய மகனுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது, கோரிக்கை மனு கொடுக்க வந்த மக்களிடம் ‘கல்யாணம் செய்த உடனே குழந்தை பிறந்துவிடுமா?’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, செய்தியாளர்கள் சந்திப்பில் துண்டுச் சீட்டில் இந்த கேள்விகளை மட்டும்தான் கேட்க வேண்டும் என்று எழுதிக் கொடுத்து பிரச்னையானது என கல்யாணசுந்தரத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், இவரே தேர்தல் வரை தொடர்ந்தால் அது முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து, அவரின் மாவட்ட செயலாளர் பொறுப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பறித்துள்ளார்.

‘கள்ளர் டாமினேஷனுக்கு END Card?’

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை ‘கள்ளர்’ சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பான்மை அடிப்படையில் இருக்கும் நிலையில், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளிலும் வழக்கமாகவே மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே தரப்பட்டு வந்தது. இந்நிலையில், பிற சமூகத்தினரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் மாவட்ட பொறுப்புகளை மற்ற சாதியை சேர்ந்தவர்களுக்கும் பிரித்துக் கொடுத்துக்கும் பாணியை திமுக தொடங்கியது. அதன்படி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக கள்ளர் சமூத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளராக கள்ளர் சமூகத்தை சேர்ந்த துரை சந்திரசேகரன் ஆகியோர் இருந்த நிலையில், தற்போது கல்யாணசுந்தரம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ‘நாயக்கர்’ சமுதாயத்தை சேர்ந்த ‘சாக்கோட்டை’ அன்பழனுக்கு மாவட்ட பொறுப்பு தரப்பட்டுள்ளது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த பழனிவேல் பொறுப்பில் உள்ளார். மேலும், பட்டியலினத்தை சேர்ந்தவரும் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கோவி.செழியனுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதவியையும் திமுக வழங்கியிருக்கிறது.

இதன்மூலம், பெரும்பான்மையாக மக்கள் தொகை கொண்ட மாவட்டத்திலும் மாற்று சமூகத்தினருக்கு முக்கியத்தும் கொடுத்து அவர்களையும் அங்கீகரிக்கும் முயற்சியை திமுக கையில் எடுத்துள்ளது.

அமைச்சர் பதவியை எதிர்பார்த்தவருக்கு மாவட்ட பொறுப்பு

திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வென்றவர் சாக்கோட்டை அன்பழகன், பின்னர் 2016 தேர்தலிலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல்போன நிலையிலும் கும்பகோணத்தில் 2வது முறையாக வெற்றி பெற்றார். 2021 தேர்தல் வென்று திமுக ஆட்சியை பிடித்த நிலையில், தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்ற ‘சாக்கோட்டை’ அன்பழகனுக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் பொறுப்பே தரப்படாமல் இருந்தது. பின்னர் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏவான டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது.

தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சாக்கோட்டை அன்பழகனுகு அப்போது ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், தேர்தலை கருத்தில்கொண்டு தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சாக்கோட்டை அன்பழகனுக்கு கட்சி பொறுப்பை வழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.