தஞ்சாவூர்:  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில், முத்தரப்பு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் வழங்கக் கோரி தஞ்சாவூர் மண்டலப் பொறியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு மற்றும் மின் வாரிய நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தஞ்சை மண்டலச் செயலாளர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகி து. கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றி, முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட அம்சங்கள் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Continues below advertisement

மேலும், நாகை திட்டத் தலைவர் எம். கலைச்செல்வன், திருவாரூர் திட்டத் தலைவர் எஸ். சகாயராஜ், தஞ்சை திட்டச் செயலாளர் பி. காணிக்கை ராஜ், நாகை திட்டப் பொருளாளர் ஆர். குணசேகரன், திருவாரூர் திட்டப் பொருளாளர் ஜி.ஆர். முருகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், பல ஆண்டுகளாக களப்பணியில் பணியாற்றி அனுபவம் பெற்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பணிப் பணி அனுபவத்தை கருத்தில் கொண்டு உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். குறிப்பாக, கள உதவியாளர், வயர்மேன் உள்ளிட்ட வழக்கமான தொழில்நுட்ப பணியிடங்களுக்கு பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பதவி மாற்றம் வழங்கப்படும் போது அதற்கேற்ற ஊதிய விகிதம், பதவி உயர்வு சலுகைகள் மற்றும் பணிமூப்பு அடிப்படையிலான முன்னேற்றங்கள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட அம்சங்களை தாமதமின்றி செயல்படுத்தினால் மட்டுமே தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு மற்றும் மின் வாரிய நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து, பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்ற உத்தரவை விரைவாக வெளியிட வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் எனவும் தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.