தஞ்சாவூர்: எந்தெந்த கோயில்கள் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். எந்த தடைகள் நீங்கும். வாழ்வு வளம் பெறும் என்று தெரிந்து கொள்ள ஆசையா? இதோ உங்களுக்காக. கோயில்கள் அனைத்தும் ஏதாவது ஒரு சிறப்பை பெற்று இருக்கும். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதி கோயில்களின் சிறப்புகள் அந்த கோயில்களுக்கு சென்றால் கிடைக்கும் நன்மைகள் பற் தெரிந்து கொள்ளுங்கள்.


கோயில்கள் நிறைந்த டெல்டா மாவட்டங்கள்


கோயில்கள் என்றாலேயே தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தஞ்சைக்கு பெரிய கோயில், நாகைக்கு வேளாங்கண்ணி, நாகூருக்கு தர்கா என்று எம்மதமும் எங்களுக்கு சம்மதம் தான் என்று பக்தர்கள் விரும்பி செல்லும் இடங்கள் உள்ளன. மிக முக்கியமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் திரும்பும் இடமெல்லாம் கோயில்கள்தான். காரணம் அனைத்து ஊர்களிலும் பிரபலமாக, பக்தர்கள் தேடி வந்து தரிசனம் செய்யும் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் இந்த கோயில்களுக்கு சென்றால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும்? தடைகள் நீங்கும் என்று தெரிந்து கொள்வதற்காக...


கருவளர்ச்சேரிக்கு சென்றால் என்ன பலன்... யார் போகணும்
 
கருத்தரிக்க வேண்டுவோர் கருவளர்ச்சேரிக்கு செல்ல வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் பாக்கியம் உண்டாகும். கருத்தரித்த பின் அது நன்கு வளர்ந்து சுகப்பிரசவம் கிடைக்க வேண்டுவோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருக்காவூர் கருவளர்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும்.


யாரெல்லாம் நோயில்லா வாழ்வு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் செல்ல வேண்டிய கோயில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில். இங்கு வழிபட்டால் நோய் நொடிகள் தீண்டாது. இதனால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்தான். முக்கியமாக வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்தும் இந்த கோயிலுக்கு வருகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஞானம் பெற எந்த கோயில் பெஸ்ட்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞானம் பெற தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். படிக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் வளர்ச்சி பெற்று வர திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூர் சென்று வழிபட வேண்டும்.


எடுத்த காரியம் வெற்றியை அடைய, மனதைரியம் கிடைக்கப் பெற கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் சென்று வழிபட வேண்டும். உயர் பதவி வேண்டும் என முயற்சி செய்பவர்கள் கும்பகோணம் பிரம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டால் போதும். நல்ல வழி பிறக்கும்.


செல்வ செழிப்புடன் வாழணுமா? அப்போ இந்த கோயில்தான்


செல்வ, செழிப்பு பெற ஒப்பிலியப்பன் கோயில், கடன் சுமை குறைய திருச்சேறை சரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும். இழந்த செல்வம் திரும்ப கிடைக்க திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்ல வேண்டும்.


திருமணத் தடைகள் நீங்கணுமா? அப்போ இங்கே போங்க!!!!


பெண்கள் ருது ஆவதற்கும், ருது பிரச்சனைகள் முழுக்க தீரவும் கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை) கோயிலில் வழிபட வேண்டும். திருமணத்தடைகள் நீங்க திருமணஞ்சேரி, நல்ல கணவனை பெற கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை கோயிலுக்கு செல்ல வேண்டும்.


குடும்ப பிரச்னையில் பிரிந்து போன தம்பதி மீண்டும் இணைய திருவலஞ்சுழி செல்ல வேண்டும். இப்படி கோயில்கள் அனைத்தும் பக்தர்களை நல்வழிப்படுத்துகின்றன. அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் இடமாக உள்ளது. என்னங்க போட்டாச்சா கோயில்களுக்கான டூரை...!