கடந்த வாரத்தில் தரமற்ற பிரியாணியால் ஆரணி அருகே சிறுமி ஒருவர் உயிரிழந்த செய்தி உணவகங்களில் விரும்பி உணவு உண்ணும் உணவு பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க இதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் பிரியாணி கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தரமற்ற இறைச்சி மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.




இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் கடைகள் மற்றும் உணவகங்களில் காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அசைவ ஓட்டல்களில் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகர நல அலுவலர் மலர்மன்னன் மற்றும் அதிகாரிகள் மயிலாடுதுறை பேருந்து நிலையம், டவுன் எக்ஸ்டென்ஷன், ஸ்டேபாங் ரோடு, காந்திஜி ரோடு, கூறைநாடு பகுதிகளில் டீ கடை, குளிர்பான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர் அதில் காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அபராதம் விதித்தனர். 




அதனைத் தொடர்ந்து பல்வேறு உயர்தர அசைவ உணவகங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சோதனையின் போது காலாவதியான சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை குளிர்பதன பெட்டியில் இருப்பு வைத்து சூடு படுத்தப்பட்டு பரிமாறப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, தரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்தனர். ஒரு அசைவ உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் கூடம் இருந்ததால் அந்த உணவகத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை நகர் முழுவதும் சோதனை செய்ததில் கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கடைகளில் காலாவதியான தின்பண்டங்களை வைத்திருந்ததற்காக பல்வேறு அசைவ உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


பறிமுதல் செய்யப்பட்ட உணவுகளின் மீது பினாயில் உள்ளிட்ட ரசாயனங்களை ஊற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர். இதுபோன்று தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும், தரமான உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், தரமற்ற காலாவதியான உணவு பொருட்களை   உணவகங்களில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவக உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.


மயிலாடுதுறை: குத்தாலத்தில் சிபிஎம், பாஜக இடையே மோதல் - பிரதமரை இழிவுப்படுத்தியதாக புகார்