“சரியான கருத்து... ஓ.பி.எஸ். சொல்வது சரியான கருத்து. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவரவர். அவரவராக இணைந்து தி.மு‌.க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.



தஞ்சாவூருக்கு இன்று வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அது சரியான கருத்தாகும். அவரவர் அவரவராக இணைந்து தி.மு‌.க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம். நேற்று வரை நடந்ததை மறந்து விட்டு எல்லாம் நல்லவைக்கே, நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதை தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன்.


 





யாரும் யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலில் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம். அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழையதை நினைத்துக் கொண்டிருக்க கூடாது. அதை கெட்ட கனவாக மறந்து விட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கலாம்.

ஜெயக்குமார் தொடர்ந்து அரசியல் பற்றி தெரியாமல் பேசுகிறார். அவர் தெரிந்து பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என தெரியவில்லை. 8 வழி சாலை குறித்து கடந்த ஆட்சியின்போது தி.மு.க முதலில் ஆதரவு தெரிவித்து, பின்னர் எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களைப் போல் அண்டர் பல்டி அடிப்பவர்கள் யாரும் கிடையாது. 8 வழி சாலை என்ன பெயரில் வந்தாலும் மக்களை பாதிக்கும் போது அதை நாங்கள் எதிர்ப்போம்.


 





கடந்த முறை கூட நாங்கள் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொது மக்களோடு சேர்ந்து போராடினோம். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு கொடுத்து தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். விமான நிலையம் வருவது வளர்ச்சிக்கு தான். ஆனால் அதே வேளையில் விமான நிலையத்திற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களது கோரிக்கையை கேட்க வேண்டும்.

மேகதாதுவில் அணை வந்தால் தமிழ்நாடு சோமாலியாவை போல் மாறிவிடும். மேகதாதுவில் அணையை கட்டும் கர்நாடக அரசின் முடிவை மத்திய ,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். பேராவூரணி மொய் விருந்து பாரம்பரியமாக நடக்க கூடியது. அதில் வரும் பண மூலம் வட்டியில்லா கடன் கொடுக்கப்படுகிறது.

அது தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து என்பதால் பேசப்படுகிறது. பாரம்பரியமாக நடக்கக் கூடிய மொய் விருந்து குறித்து எதுவும் தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். மத்திய அரசு தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றி வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.