தஞ்சாவூர்: தமிழகம் போதைப் பொருட்களின் விற்பனை மையமாக மாறி வருகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டடினார்.


தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:


தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை


சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்ற நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். விமானப்படை நிகழ்ச்சிக்கு 15 லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வளவு மக்கள் கூடும் நிலையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.


ஆனால் இறந்தவர்கள் நெரிசலில் சிக்கி இறக்கவில்லை. வெயில் நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் இறந்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கூறுகையில் கூட்ட நெரிசலில் இருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் சிக்கித் தவித்தோம் என்று  தெரிவித்துள்ளனர். இது முதலமைச்சரின் கவன குறைவு என்று கூறுவதா? அல்லது அவரது கவனத்திற்கு செல்லவில்லை என்று கூறுவதா?  அல்லது காவல்துறை மீது குற்றம் சொல்வதா? விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இது போன்ற நிகழ்வுகள் குறித்து என்ன கூறுவது? இதற்கு முழு பொறுப்பையும் முதல்வர் தான் ஏற்க வேண்டும்.




முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கு மட்டுமே பாதுகாப்பு


இங்கு முதல்வருக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களாக இருக்கட்டும். வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.  கூலிப்படைகள் மூலம் நடக்கும் கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுக்கெல்லாம் காரணம். போதை மருந்து பழக்கம், கஞ்சா மற்றும் போதை மருந்து வியாபாரத்தை அரசு  கட்டுப்படுத்த தவறியதால் இங்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.


மகாமகம் விபத்தை அரசியலாக்கியது திமுகதான்


கும்பகோணம் மகாமக குளத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குளிக்க வந்த பொழுது ஏற்பட்ட விபத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அரசியல் ஆக்கியது திமுக தான்.  இவர்கள் செய்யும் தவறுகளையும், திமுக நிர்வாகிகள் ஈடுபடுகின்ற போதை மருந்து கடத்தலையும் போதை மருந்து வியாபாரத்தை பற்றி கூறினால் அது அரசியலாம். பல லட்சம் மக்கள் கூடும் இடத்தில்  இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தெரிந்தும் முன்னேற்பாடுகள் செய்யாமல் இத்தனை உயிரிழப்புக்கு காரணமாக இந்த அரசாங்கம் இருக்கும்போது அதை  விமர்சனம் செய்வதற்கு சாதாரண குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. தமிழ்நாட்டுல வாழ்கிற ஒரு குடிமகனாக நான் சொல்றேன். அரசியல் செய்யல. இனியாவது இந்த அரசு திருந்துமா என பார்க்கணும்.


போதைப்பொருள் விற்பனை மையமாக மாறிவிட்டது


ஏன்னா இன்னைக்கு கள்ளச்சாராய வியாபாரம் நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. கூலிப்படைகள் அதிகரித்து விட்டனர். தமிழகம் போதைப் பொருளின் ஹப் ஆக மாறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. அதிமுக  இயக்கம் அம்மாவின் இயக்கம். பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் அந்த இயக்கம் வந்தவுடன் அம்மாவின் கொள்கை வழியிலிருந்து மாறியதால் தான் உருவான இயக்கம் தான் அமமுக இயக்கம்.


திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும் என்றால் அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஜனநாயக ரீதியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள். பழனிச்சாமிடம் இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக கண்ணை மூடிக்கொண்டு காவடி தூக்குபவர்கள், தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் இது நடக்கும்.


திமுகவுடன் சேர்ந்து பழனிசாமியையும் வீழ்த்துவோம்


காவிரியில் தண்ணீர் பெற்று தர வேண்டியது அரசின் கடமை. சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் எளிதாக கூறி கர்நாடக அரசிடமிருந்து காவிரி தண்ணீரை எளிமையாக பெற்று தரலாம். பழனிச்சாமிடம் இருந்த கோபத்தின் காரணமாக திமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்களோடு மக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் ஆதரவோடு கூட்டணி பலத்தோடு நாங்கள் தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். மேலும் திமுகவுடன் சேர்த்து பழனிச்சாமியும் வீழ்த்துவோம். 2026 இல் நடக்கும். அதிமுக எம்எல்ஏக்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற யூகத்திற்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.


கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள்கள் புழக்கம்


கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள்கள் எப்படி புழங்குகிறது. அவர்கள் வெளிநாட்டில் சென்று வாங்கி வருகிறார்களா? இங்கு போதைப்பொருள் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. கூலிப்படையினர் உருவாவதற்கு இங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லாத காரணம். இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். பழனிச்சாமி  தன் மீது எந்த வழக்கும் வந்து விடக்கூடாது. தங்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து வழக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார்.  அதானி துறைமுகத்திலிருந்தா திமுக நிர்வாகி போதை பொருட்களை எடுத்து வந்தார். திமுக கூட்டணியில் உள்ள விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. அது குறித்து அழுத்தம் கொடுக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு முதல்வர் மது ஒழிப்பு பற்றி பேசுகிறார்.


பயமுறுத்துவதற்காக அரசு வழக்கு போடுகிறது


அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வைத்திலிங்கம் உட்பட முன்னாள் அமைச்சர்கள் கூறி வருவதால் அவர்களை பயமுறுத்துவதற்காக திமுக அரசு வழக்கு போட்டுள்ளது. சனாதனம் என்றால் என்னவென்று தெரியாத எங்களுக்கு  அதைப்பற்றி சிலர் தெரிய வைக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.