தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம், பதிவாளர் (பொறுப்பு) ரெ. நீலகண்டன், மொழிப்புல முதன்மையர் இரா. காமராசு ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவர் பெ. இளையாப்பிள்ளை வரவேற்றார். இதில் திருச்சி சிவா

  எம்பி பேசுகையில்,  வங்க தேசத்தில் தாய்மொழியான வங்காள மொழிக்காகக் கிளர்ச்சி ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் 1952 ஆம் ஆண்டில்சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஐ.நா. சபைக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, 1999 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கடைப்பிடிக்கப்படும் என யுனெஸ்கோ மூலம் அறிவிக்கப்பட்டது.




உலக அளவில் கிரேக்க மொழி அழிந்துவிட்டது. விவிலியம் எழுதப்பட்ட ஹீப்ரு மொழி, இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாண்டலின் என்கிற சீன மொழி மெல்ல, மெல்ல சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. இதேபோல, சம்ஸ்கிருதம் மக்கள் மொழியாக மாறவில்லை. ஆனால், மக்களுக்காகவும், இறைவனுக்காகவும், இலக்கியத்துக்காகவும், தொழில்நுட்பத்துக்கு ஏற்றதாகவும், காலங்களை வென்றதாகவும் இருப்பது நம் தாய்மொழி தமிழ் மட்டுமே இருக்கிறது. நம் மொழியைக் காப்பதற்குத் தானமாக ஏராளமானோர் தங்களது உயிரைக் கொடுத்தனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி நினைவுகூர்ந்து, வீரவணக்கம் செலுத்திப் போற்றுகிறோம்.


இந்தி மொழி நமக்கு எதிரி அல்ல. நம்மை ஆதிக்கம் செலுத்த வருகிற மொழி இந்தி என்ற காரணத்தால், அதை எதிர்க்கிறோம். இந்திக்கு எதிராக 1937, 1948 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து பல முறை நடைபெற்ற போராட்டம் 1965 ஆம் ஆண்டில் உச்சத்தை அடைந்தது. நம் நாடு சுதந்திரமடைந்தபோது, நம்முடைய ஆட்சி மொழி ஆங்கிலமாகத்தான் இருந்தது. ஆனால், அரசியல் சட்டத்தில் இனிமேல் இந்தியாவின் ஆட்சி மொழி இந்திதான் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மட்டுமே.




இந்த பிரச்னையை பஞ்சாபி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி பேசுபவர்கள் பொருட்படுத்தாமல் இருந்த நிலையில், ஆங்கிலத்தை அகற்றினால், இந்தி மட்டுமே எல்லாவற்றையும் விழுங்கிவிடும் என்பதை எச்சரித்த மண் தமிழ்நாடுதான். இதன் விளைவாக 1962 ஆம் ஆண்டில் ஆட்சி மொழித் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்ணாவின் முயற்சியால் ஆங்கிலம் இணைப்பு ஆட்சி மொழியாகத் தொடர்கிறது. இந்த இரு மொழிக் கொள்கையை நம்முடைய முதல்வர் ஸ்டாலின் உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறார் என்றார். மேலும், அவர் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.  மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் கி. பெருமாள் நன்றி கூறினார்.