புதிய செல்போனை சரி செய்ய பணம் பெற்ற விவகாரம்: சாம்சங் நிறுவனத்திற்கு ரூ. 30,604 அபராதம்

குறிப்பாக போன் வாங்கியதில் இருந்து அதீத வெப்பம் ஏற்படுவதாகவும் கூகுள் குரோம் போன்ற செயலிகள் வேலை செய்ய வில்லை என்றும் கூறப்படுகிறது.

Continues below advertisement
புதிதாக வாங்கி ஒரு மாதமே ஆன  சாம்சங் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட பழுதிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், சாம்சங் நிறுவனத்திற்கு 30,604 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 25/4/2022 ல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சங்கீதா மொபைல்ஸ் என்கிற நிறுவனத்தில் 15,604 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி ஏ 12 என்கிற ஆண்ட்ராய்ட் மொபைலை வாங்கியுள்ளார். அத்துடன் இணைந்து கொடுக்கப்பட்டதாக கூறப்படும் pop Socket மற்றும் umbrella bags எதுவும் அத்துடன் இணைத்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 06.05.2022ல் அந்த மொபைல் போனில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
குறிப்பாக போன் வாங்கியதில் இருந்து அதீத வெப்பம் ஏற்படுவதாகவும் கூகுள் குரோம் போன்ற செயலிகள் வேலை செய்ய வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து அந்த நிறுவனத்தில்  தெரிவித்து 1018 ரூபாய்க்கு சர்வீஸ் செய்துள்ளார். இருப்பினும் அந்த மொபைல் போனில் உள்ள பிரச்சனைகள் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து செல்வகுமார் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு மொபைல் போனுக்கான வாரண்டி இருக்கும்போது அதில் உள்ள பழுதை நீக்குவதற்கு பணம் பெற்றது நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது  என்றும் எனவே அந்த பழைய போனை எடுத்துக் கொண்டு போனுக்கான 15 ஆயிரத்து 604 ரூபாயும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக பத்தாயிரம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயும் என மொத்தம் 30,604 ரூபாயை பெங்களூரில் உள்ள சங்கீதா மொபைல்ஸ் தனியார் நிறுவனம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சங்கீதா மொபைல்ஸ் நிறுவனம் மற்றும் புது டெல்லியில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மூலமாக பல்வேறு அதிரடி தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினால் அவர்களுக்கு உரிய தீர்வு என்பது கிடைக்கிறது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரபல கார் நிறுவனத்திற்கு அபராதம் இதேபோன்று பல்வேறு அதிரடி தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்ட வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
Continues below advertisement