திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 800 பணம் சிக்கியது. போக்குவரத்து அதிகாரிகளிடம் விசாரணை நடந்துவருகிறது

 

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  போலீசார் இன்று திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்,  ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகம், ஒசூர் போக்குவரத்து சோதனைச் சாவடி, நாகர்கோயில் வட்டார போக்குவரத்து அலுவலகம், நாகை, திருவண்ணாமலை, திருவான்மியூர், அரியலூர், பெண்ணாடம், சிவகங்கை என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. நாள்தோறும் வாகன பதிவு, புதுப்பித்தல், ஒட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு பணிகள் காரணமாக எந்தநேரமும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடன் இந்த அலுவலகம் காணப்படும். இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா மற்றும் காவல் துறையினர் அதிரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் சோதனை நடத்தினர்



இதனையடுத்து அந்த அலுவலகத்தில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்த வாகன பதிவு, ஒட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். இதில் பல்வேறு பணிகள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வழிமுறை காரணமாக பணம் பரிமாற்றம் என்பது மிக குறைவு. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் உரிய கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 800 பணம் ரொக்கமாக சிக்கியது. இந்தப் பணம் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த இடைத்தரகர்கள் வைத்திருந்த பணம் என கூறப்படுகிறது. மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களை புகைப்படம் எடுக்கும் நபரிடமும் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனையும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.



இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கணக்கில் வராத பணம் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம், வாகன பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இரவு வெகுநேரம் வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது