எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை 4 கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.


தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மிக உதவியாக இருப்பது ரேஷன் கடை. இன்றளவும் ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை இன்றளவும் செயல்படுத்தி வரும் குடும்பங்கள் எண்ணில் அடங்கா உள்ளன. அதனை ஒட்டி தமிழக அரசு கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலமாக பொருட்களை வாங்கி பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து அதிக தூரம் செல்லாமல் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பேசும் பொருட்கள் வாங்குவதற்காக அதிக அளவில் புதிய ரேஷன் கடை கட்டிடங்கள் கட்டி அதன் மூலமாக பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் அருகே கீழகூத்தங்குடியில் 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை கட்டிடத்தை உடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர ரேஷன் கடைகள் 579, பகுதி நேர ரேசன் கடைகள் 156 என மொத்தம் 735 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் அத்தியாசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் மக்கள் நலனை கருத்தில் அந்தந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடைகள், பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சியில் கீழகூத்தங்குடி கிராமத்தில் 2014-15 அதாவது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்-அமைச்சரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு தனியாக ஒரு ஆழ்குழாய் போர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்வுதளம், கழிவறை, கைபம்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பல்வேறு காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. சாய்வு தளம் சிதைந்தும், கட்டிடத்தின் ஜன்னல், ஷெட்டர்கள் துருப்பிடித்து வினாகி வருகிறது. ஆழ்குழாய் பயன்படுத்தப்படாமல் பயனற்று இருக்கிறது. எனவே இந்த ரேஷன் கடை கட்டிடத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கீழகூத்தங்குடி, அன்னுக்குடி ஆகிய கிராமங்களில் சுமார் 200 குடும்பங்கள் மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடூருக்கு தான் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை ஏற்று கடந்த 2014-15 ஆண்டில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அனைத்து வசதிகளுடன் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. எந்ந காரணத்திலோ சென்ற ஆட்சியில் திறக்கப்படாமல் போனது. தற்போது இந்த கட்டிடத்தில் லேசான விரிசல் ஏற்பட்டதுடன், தரைகள் சிதைந்து காணப்படுகிறது. எனவே இந்த கட்டிடத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கடையினை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலும் திறக்கப்படவில்லை. இந்த கட்டிடம் எப்போதும் திறக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.