முத்துப்பேட்டையில் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் 38 பவுன் நகை மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மணப்பெண்ணின் தோழியே திருடியது அம்பலமானது.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் முகமது ஆரிப்(53) இவரது மகளுக்கு கடந்த 18ந் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் மணப்பெண்ணின் தோழிகள் உட்பட உறவினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து மாலை பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த மணப்பெண்ணின் கழுத்து மாலை, செயின், ஆரன், வளையல், மோதிரம் ஆகிய 38 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து முகமது ஆரிப் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் மணப்பெண்ணின் தோழியான திருத்துறைப்பூண்டி மணலியை சேர்ந்த பாலு மகள் வினிதா(25) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் விசாரணையில் எம்சிஏ படித்துள்ளார். இன்னும் திருமண ஆகவில்லை. பட்டதாரியான வினிதாவும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட முத்துப்பேட்டை மணப்பெனுண்டன் மன்னார்குடி தனியார் கல்லூரியில் படித்துள்ளனர். பின்னர் வினிதா படிப்பு முடிந்து சென்னையில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.




தோழிக்கு திருமண நிச்சயதார்த்தம் அழைப்பு வந்ததும் கடந்த 18ந் தேதி சென்னையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வந்த வினிதா வீட்டில் உள்ள மாடியில் மணப்பெண்ணின் அறையில் தங்கியுள்ளார். அப்போது மணப்பெண் நகைகளை கலட்டி வைத்தபோது நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் தோழி மற்றும் உறவினர்களை கவனத்தை திசை திருப்பி அப்போதே நகைகளை திருடி வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாத போன்று ஊர் செல்வதாக கூறி அன்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள நகை கடையில் பாதி நகையை விற்றுவிட்டு வேறு நகை வாங்கியுள்ளார். பின்னர் மன்னார்குடிக்கும் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டிக்கும் வந்து மற்ற நகைகளை விற்பனை செய்தது தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட வினிதா சென்னையில் தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அறையில் பல்வேறு வசதிகளுடன் சொகுசாக இருந்துள்ளார். மேலும் அறையில் அங்கிருந்த முக்கிய பொருட்களை பார்த்து போலீசாரே அதர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிலர் தொடர்பு உள்ளதால் அவர்களையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதுகுறித்து பிடிப்பட்ட வினிதாவிடம் போலீசார் தொடர்ச்சியாக துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.  




இந்தநிலையில் தோழி வீட்டிலேயே பட்டதாரி பெண் ஒருவர் திருடிய சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சம்பவம் நடைபெற்று 10 நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற வீட்டில் இருந்து 38 சவரன் தங்க நகைகள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளது மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் சம்பந்தப்பட்ட காவலர்களை  பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இதே போன்று காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்து தர வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.