திருவாரூர் அருகே காட்டூர் சுற்றுலாத்தளம் ஆகும் அளவுக்கு  கட்டப்பட்டுள்ள  கலைஞர் கோட்டம் திறப்பு விழா வரும் ஜூன் 15 ம்  தேதி நடக்கிறது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போதைய நாகை மாவட்டம் திருக்குவளையில் பிறந்தாலும், கருணாநிதியின் பள்ளிப் படிப்புக்காக திருவாரூரில் குடியேறி வசித்து வந்தது கருணாநிதியின் குடும்பம். திருவாரூர் கமலாலய குளம் தென்கரையில் உள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் முதலியார் பள்ளியில் பயின்றார். அப்போதுதான் திருவாரூரில் இந்திய எதிர்ப்பு போராட்டத்தை மாணவப் பருவத்திலேயே தொடங்கினார். முதன் முதலில் ஓடி வந்த இந்தி பெண்ணே நீ நாடி வந்த இடம் இதுவல்ல என கவிதைகளை எழுதி திருவாரூர் தெற்கு வீதியில் முழக்கமிட்டார் என்பது வரலாறு. திருவாரூரில் தனது இளமைப் பருவத்திலேயே பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கம் குறித்த கைப்பிரதிகளை எழுதி தன்னை எதிர்காலத்தில் ஒரு திராவிட இயக்கத்தை நடத்துகிற தலைவராக செதுக்கிக் கொண்ட ஊர் திருவாரூர். அதிலும் குறிப்பாக திருவாரூரை அடுத்த காட்டூரில் இவரது குடும்பத்தார் நட்பு பாராட்டிய ஊர். காட்டூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பெயர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார். இந்த அம்மையாரின் நினைவிடமும் காட்டூரில் தான் உள்ளது. திருவாரூர் வருகை தரும் போதெல்லாம் காட்டூரில் தனது தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை உயிர் உள்ளவரை தனது முதன்மையான கடமையாக கருணாநிதி செய்து வந்தார். அந்த வகையில் தான் திமுக சார்பில், கலைஞர் கோட்டம்  என்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு புகழிடம் ஒன்று காட்டூரில் கட்டப்பட்டுள்ளது. 



 

ஏற்கனவே ஜூன் 3 ம்  தேதி இந்த கலைஞர் கோட்டம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 15ஆம் தேதி திறப்பு விழா நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று மாலை காட்டூரில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெறும் எனவும் அதற்கான பந்தல் அமைக்கும் பணிகளை திருவாளர் சட்டமன்ற உறுப்பினர் போட்டி கலைவாணன் செய்து வருகிறார். இந்தக் கோட்டம் திறக்கப்பட்டால் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாறுகின்ற தரத்தோடு மறைந்த கருணாநிதி குறித்த தகவல்களை ஆவணப்படுத்தி உலகுக்கு எடுத்துச் செல்லும் உணர்வு மிக்க இடமாக திகழும் வகையில் பிரம்மாண்டமாக இந்த கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த கோட்டத்தில், கருணாநிதியின் இளமை கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள் கட்டுரைகள் என காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தின் முன்பக்கத்தில் மளிகை கற்களால் கலைஞர் திருவுருவ சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அகில இந்திய அரசியல் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த திறப்பு விழா நாடாளுமன்றத் தேர்தலுக்கான முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.