திருவாரூர் மாவட்டம் - திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், புதிய வழித்தடத்தில் பேருந்துகள் துவக்கம், மற்றும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக புறநகர பேருந்துகளை நகர பேருந்துகளாக மாற்றம் செய்து இயக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நகரப் பேருந்துகளில் செல்ல மகளிருக்கு இலவசம் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து விட்ட நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் அந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நான்கு பணிமனைகளில் இருந்து புதிய வழித்தடங்கள் மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் திருவாரூர் டாக்டர் கலைஞர் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி வைத்தார்.

 

மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் பேருந்துகளை இயக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தனர். திருவாரூரிலிருந்து அடவங்குடி வரை ஒரு புதிய வழித்தடமும், இதேபோன்று திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வரை புதிய பேருந்து வசதி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை மகளிர் மேற்கொள்வதற்கு கூடுதல் பேருந்துகள் இன்று விடப்பட்டன.



மேலும் கொரடாச்சேரி குடவாசல் வழியாக அடவங்குடி செல்வதற்கு புதிய பேருந்து வழித்தடத்தையும், திருவாரூர் முதல் நீடாமங்கலம் செல்வதற்கு புதிய வழித்தடத்தையும், மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அதேபோல புறநகர் பேருந்துகளை நகர பேருந்துகள் ஆக மாற்றம் செய்து இயக்கும் திட்டத்தின் அடிப்படையில் திருவாரூர் முதல் நாகலூர் வரை செல்லும் பேருந்து, பெருங்கடம்பனூர் வழியாக நாகப்பட்டினம் வரை செல்லும் பேருந்து, பாக்கம் கோட்டூர் வழியாக நாகை மாவட்டம் திட்டச்சேரி வரை செல்லும் பேருந்து 9 தப்பளாம்புலியூர் வழியாக மோகனூர் வரை செல்லும் பேருந்து சேவைகளையும் தொடங்கிவைத்தார். அதேபோல ஏற்கனவே நிறுத்தம் செய்யப்பட்ட பேருந்து சேவையான கொரடாச்சேரி ஆர்பாவுர் வழியாக மன்னார்குடி குடவாசல் செல்லும் பேருந்து சேவையையும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.



மேலும் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நகர பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று பேருந்து சேவை தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, இளைஞர் அணியை சேர்ந்த ரஜினி சின்னா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி, பல்வேறு இடங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டார் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் பேருந்து நிலையத்தில் சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.