உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் வருகிற ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்.

 

அதில் அவர் கூறியதாவது: தேரோட்டத்தினை முன்னிட்டு ஒரு காவல் கண்காணிப்பாளர், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 17 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 54 காவல் ஆய்வாளர்கள் உட்பட1500 காவல் துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள். மேலும் 4 வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் ட்ரோன் கேமரா 100 கேமராக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும். குறிப்பாக 45 மொபைல் கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவார்கள். அது மட்டுமின்றி வாகனங்கள் நிறுத்துவதற்கு 8 தனியார் வாகன நிற்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 



 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்தை மாற்று பாதையில் செலுத்தவும் 200 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 இடங்களில் போக்குவரத்து மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கங்களாஞ்சேரி, திருக்கண்ணமங்கை, இபி ஜங்ஷன், விளம்பர புது பாலம், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட 9 இடங்களில் போக்குவரத்து மாற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு வீதிகளிலும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வியாபாரிகள் எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவில்லை எனவும் குறிப்பாக ஊதுகுழழை ஊதுவதற்கு தடை ஏதும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் அதிக சத்தம் வரக் கூடிய பொருள்களை விற்பனை செய்வதால் தேரோட்டத்தின் போது பெண்களிடம் பிரச்சனை ஏற்படும் வகையில் பலர் நடந்து கொள்கின்றனர். அதனை தடுக்கும் வகையில் மட்டும் ஊதுகுழழை மட்டும் விற்பனை செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

 

மேலும், தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக காவல்துறை சார்பில் எட்டு இடங்களில் வாகன நிறுத்த போதுமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தியாகராஜர் கல்வி நிறுவனம் எதிர்ப்புறம் நியூ பாரத் பள்ளி அம்மா உணவகம் எதிர்புறம் உள்ளிட்ட எட்டு இடங்களில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கு வரும் பெண் பக்தர்களிடம் ஏதேனும் திருட்டு செயல்கள் நடைபெறாமல் இருக்க அதிக அளவில் சாதாரண முறையில் ஆண் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் 10 இருசக்கர வாகன ரோந்து மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து நியமிக்கப்பட்டுள்ளது. தேரோடும் நான்கு வீதிகளிலும் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு செய்ய காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.