தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு என்றாலே தியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மேலும் மற்றொரு சிறப்பு மிகப்பழமை வாய்ந்த திருவையாறு ஐயாறப்பர் கோயில்.


ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள்:


இக்கோயிலில் ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள காவிரிக் கோட்டம் உள்ளது. தெற்கே தென் கயிலாயம், வட திசையில் வட கயிலாயம் என ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது மிகச்சிறப்பாகும். இதைச் சுற்றி பெரிய திருமதில்கள் உள்ளன. 15 ஏக்கர் பரப்பளவுடைய இக்கோயில் பரப்பளவில் தஞ்சை பெரியகோயிலை விட மூன்று மடங்கு பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பட்டது. மேற்குக் கோபுரம் முதல் சுற்று, நடை திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தெற்குக் கோபுரம் ஆகியவை ஆணையபிள்ளையும், அவருடைய தம்பி வைத்தியநாதரும் எழுப்பியவை.


சோழர் காலம்:


இங்குள்ள வட கயிலாயம் என்ற ஒலோக மாதேவீச்சரம் முதலாம் ராசராச சோழனின் மனைவி ஒலோக மாதேவியால் கட்டப்பட்டது. தென் கயிலாயம் கோயிலை கங்கை கொண்டான் என்றழைக்கப்படும் முதலாம் ராசேந்திர சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்டது. முதலாம் ராசராச சோழன் காலத்தில் இந்த ஊர் பொய்கை நாட்டுத் திருவையாறு என அழைக்கப்பட்டது.




இங்கு ஞானசம்பந்தர், திருநாவுச்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என அனைத்து நாயன்மார்களும் பாடியுள்ளனர். இக்கோயிலுக்கு நிறைய பதிகங்கள் பாடப்பட்டுள்ளள.


இக்கோயிலில் மொத்தம் 5 திருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் மூலவரும், அனைத்துப் புடைசூழ் தெய்வத் திருமேனிகளும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் சோமாஸ்கந்தருக்கு தனிக் கோயிலும், அதன் அருகில் செப்பேசுர மண்டபமும், பஞ்ச பூதலிங்கங்களும், ஏழு கன்னியர்களும், ஆதி விநாயகரும், நவக்கிரக கோயில்களும் உள்ளன. இந்தச் சுற்றிலேயே விநாயகர், வில்லேந்திய வேலவர், நடராசர், ஏழூர் திருநகர் லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


தனிச்சிறப்பு:


மூன்றாம் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் இறைவனின் திருப்பெயரான ஐயாறா எனச் சொல்லி அழைத்தால் ஏழு முறை எதிரொலியாக ஒலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.


நான்காம் திருச்சுற்றின் தெற்குப் பகுதியில் பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்ட தென் கயிலாயம், ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட வட கயிலாயம் போன்றவை உள்ளன. இந்தச் சுற்றின் கீழ், மேல் திசைகளில் சிற்பக் கலைகளால் அழகாக அமைக்கப்பட்ட வானுயர் ராஜகோபுரங்கள் தென் கோபுர வாயிலில் ஆட்கொண்டார் சன்னதி உள்ளது.
 
ஐயாறப்பர் மூலவர் கோயிலுக்கு ஈசானத்தில் அறம் வளர்த்த நாயகியின் கோயில் உள்ளது. கிழக்குக் கோபுரத்துக்கும் அறம் வளர்த்த நாயகி கோயிலுக்கும் நடுப்பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் தண்டபாணி கோயிலும், ஆட்கொண்டார் சன்னதியை அடுத்து உள் பகுதியில் திருக்குளத்தை ஒட்டி காசி விசாலாட்சி கோயிலும் அமைந்துள்ளன.


செல்வது எப்படி?


திருவையாறு அருகில் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய 5 ஆறுகள் ஓடுகின்றன. இத்தலத்து இறைவனுக்கு இந்த 5 ஆறுகளின் நீரினால் அபிஷேகம் செய்யப்படுவதால் திருவையாறு என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


இக்கோயிலுக்குச் செல்லும் வழி: தருமபுர ஆதீனத்திற்கு உள்பட்ட தேவஸ்தானங்களில் இக்கோயிலும் ஒன்று. தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் உள்ள திருவையாறில் இக்கோயில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோயிலை பார்ப்பதற்காக ஏராளமான வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவையாறின் பெருமைகளில் இக்கோயிலும் ஒன்றாகும்.