தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி மேம்பாலம் பக்கவாட்டு சுவர் சுமார் 10 அடி உயரத்திற்கு சர்வீஸ் ரோடு பகுதியில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் என். ஹெச் (67) எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டில் கடந்த 2008ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தான் தஞ்சை-திருச்சி மார்க்கத்தில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றது. மேலும் சரக்கு ஏற்றிய லாரிகளும் அதிகளவில் சென்று வருகின்றன.


இந்நிலையில் தஞ்சாவூர் – திருச்சி செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் இன்று (20ம் தேதி) அதிகாலை பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சுவர் சுமார் 10 அடி உயரம் 5 மீட்டர் நீளம் அளவிற்கு சரிந்து விழுந்தது. அதிகாலை வேளை என்பதால் அதிக போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாலத்தின் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு,  மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதையடுத்து இடிந்து விழுந்த பகுதியில் உள்ள இடிபாடுகள் மற்றும் மண் அகற்றப்பட்டு அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை செய்ய,தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.


இருப்பினும் சரிவு ஏற்பட்ட இடத்தில் அடுத்தடுத்து பக்கவாட்டு சுவர் சரிவதால் தற்சமயம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை முறையாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை. செங்கிப்பட்டியில் சர்வீஸ் ரோடு சீர்கேடாக உள்ளது. வாகனங்கள் செல்வதில் பெரும் அவதி ஏற்படுகிறது முறையாக வடிகால் பராமரிக்கப்படாததால் சாலையில் அதிகளவு மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.




எனவே பாலம் மற்றும் சாலையை முறையாக பராமரிக்க வலியுறுத்தி மா.கம்யூ,கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து செங்கிப்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லும் நேரத்தில் மறியல் நடத்தினால் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் தஞ்சை மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாக பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சம்பவம் குறித்து அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் அதிகாரிகள் செங்கிப்பட்டிக்கு விரைந்து வந்து மேம்பாலத்தில் இடிந்து விழுந்த பகுதியை பார்வையிட்டனர். மேலும் திருச்சி துவாக்குடி பகுதியில் இருந்து என்ஐஐடியை சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வுக்காக வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.