தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வரத்து வாய்க்காலை சொந்தச் செலவில் பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் தூர்வாரி கொடுத்தார். இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் அவருக்கு பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
 
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பாசனக்குளத்துக்கு செல்லும் நீர் வரத்து வாய்க்காலை தனது சொந்தச் செலவில் தூர்வாரித் தந்த, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement




தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சிக்கு உட்பட்டு, மல்லிப்பட்டினத்தில் கள்ளிக்குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. 


இந்நிலையில், வரத்து வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டதாலும், காலப்போக்கில் தூர்ந்து போனதாலும், கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்காலில் இருந்து கள்ளிக்குளத்துக்கு பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 15 வருடங்களாக விவசாயிகள் மழை பெய்தால் மட்டுமே பாசனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. 


இதுகுறித்து, இப்பகுதி பொதுமக்கள் சமீபத்தில் எம்எல்ஏ., நா.அசோக்குமாரை சந்தித்து தங்களின் பிரச்சினை குறித்து விளக்கி கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வரத்து வாய்க்காலை தூர்வாரித் தந்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலைங்கள் பாசன வசதி பெறும் என்றும் வலியுறுத்தினர்.


இதையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தனது சொந்தச் செலவில், வாய்க்காலை தூர்வாரித் தருவதாக எம்எல்ஏ.,  நா.அசோக்குமார் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆண்டிக்காடு திமுக கிளைச் செயலாளர் என்.மணிவண்ணன் மேற்பார்வையில், பொக்லைன் மூலம் வாய்க்கால் தூர்வாரி, தண்ணீர் வர வழிவகை செய்யப்பட்டது. 


இதனால், கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால் மூலம் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து பாசன வசதி மேற்கொள்ள முடியும் என்பதால், பாசனதாரர்கள், கிராமத்தினர், ஜமாத்தார்கள் எம்எல்ஏ., நா.அசோக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நடவுப் பணிகளை மேற்கொள்வதோடு, தகுந்த உரங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளைப் பயன்படுத்துகின்றனர். நடப்பு ஆண்டில், குறுவை சாகுபடி அதிக மகசூலைக் கொடுத்த நிலையில், சம்பா சாகுபடியிலும் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். 


இயந்திரங்கள் மூலம் நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பா பருவத்திற்கு உகந்த, சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்யுமாறு தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பேராவூரணி எம்எல்ஏ தனது சொந்தப்பணத்தில் வரத்து வாய்க்காலை தூர் வாரி தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.