தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னொளி மற்றும் சிந்தடிக் ஓடுதளத்தில் நேற்று இரவு முதல்முறையாக தடகள போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டிகள் இன்று வரை நடக்கிறது.
தஞ்சை மாவட்ட விளையாட்டு அரங்கமான அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், வாலிபால் மைதானம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இங்கு நவீன உள் விளையாட்டரங்கம், டென்னிஸ் அரங்கம், இறகுப்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவையும் உள்ளன. ஏராளமான விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட வீரர்கள் இதுதவிர நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு கைப்பந்து விளையாட்டு விடுதியும் இதன் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள உயர்தரத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையிலும், விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாகவும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த மே 5 ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த சிந்தடிக் ஓடுதளத்தில் முதன்முறையாக தடகள போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், டெல்டா மாவட்டங்களின் தடகள சாம்பியன்ஷிப்-2025 போட்டிகள் நேற்று இரவு தொடங்கி, இன்று இரவு (ஜூலை 13) நிறைவு பெறுகிறது. இதில் விளையாட்டு போட்டிகளை தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து 6, 8, 10 வயது மாணவ, மாணவிகளுக்கு 40 மீ, 50 மீ, 60 மீ, 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 6 வயது முதல் 10 வயது வரை உள்ள பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமைகளை காட்டி அசத்தினர்.
தொடர்ந்து இன்று 12 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
தொடக்க விழா நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதயவிழா குழுத் தலைவர் து.செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மருத்துவர் சுந்தர், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், தஞ்சாவூர் தடகள சங்க செயலாளர் செந்தில், இணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளை தஞ்சாவூர் தடகள சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு துறையின் நடுவர்கள் ஒருங்கிணைத்தனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர்.