தஞ்சாவூர்: தஞ்சையில் பெண்ணிடம் இருந்து தங்க செயினை பறித்து சென்ற 2 பேர் போலீசார் துரத்தியதில் பைக்கில் வேகமாக சென்று முதலை முத்துவாரி பாலத்தில் மோதி கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


திருவையாறு பைபாஸ் சாலையில் செயின் பறிப்பு


தஞ்சை அருகே திருவையாறு பைபாஸ் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணை பைக்கில் பின் தொடர்ந்து வந்து நாலு பவுன் தங்கச் செயினை அறுத்துச் சென்ற 2 பேரை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். போலீசார் பிடிக்க முயன்ற போது அந்த 2 பேரும் வல்லம் முதலை முத்து வாரி பாலத்தில் மோதி கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மகளை பார்க்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி


அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி மனோசித்ரா (38). இவர் கடந்த ஞாயிறன்று தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் புறப்பட்டார். பின்னர் தஞ்சைக்கு வந்து தனது மகளை பார்த்துவிட்டு மாலையில் வீட்டிற்கு ஸ்கூட்டியில் புறப்பட்டார். தஞ்சை - திருவையாறு பைபாஸ் பகுதியில் ஒரு வாகன ஷோரூம் எதிரில் மனோ சித்ரா ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது  ஒரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் வெகு வேகமாக மனோ சித்ரா கழுத்தில் அணிந்திருந்த நாலு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோசித்ரா சட்டென்று சுதாரித்துக் கொண்டு தனது ஸ்கூட்டியில் அந்த மர்ம நபர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்தார்.


போலீசார் தீவிர விசாரணை


ஆனால் அந்த மர்ம நபர்கள் பைக்கில் மிக வேகமாக சென்றுவிட்டனர். இது குறித்து மனோசித்ரா  தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார் . இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் திருவையாறு பைபாஸ் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வல்லம் சாலையில் சென்றனர்.


பைக்கை விரட்டி சென்ற போலீசார்


தொடர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் அந்த பைக்கை விரட்டி சென்றனர். போலீசார் தங்களை விரட்டி வருவதை கண்ட அந்த நபர்கள் பைக் வேகமாக ஓட்டியதில் நிலைதடுமாறி வல்லம் முதலைமுத்துவாரி பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். உடன் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் திருச்சி மணச்சநல்லூர் தெற்கு சிறுபத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (33), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜ்கிரண் (28) என்பதும் தெரிய வந்தது. 


செயின் திருடர்கள் சிக்கினர்... கை, கால் முறிந்தது


மேலும் ராமச்சந்திரன், ராஜ்கிரண் இருவரும்தான் மனோசித்ரா கழுத்தில் இருந்த நகையை பறித்து சென்றதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 30 கிராம் தங்க செயினையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் ராமச்சந்திரனுக்கு காலிலும், ராஜ்கிரணுக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது அவர்கள் இருவரையும் போலீசார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.