தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மும்மதம் கலந்த கட்டடக்கலை இருக்கிறது என்பது தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்தியாவில் காலனியாதிக்கம் ஏற்பட்ட பிறகு ஆங்கிலேயர்கள் தங்களுக்கென தனித்துவமான கட்டட பாணியை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டடக்கலையே இந்தோ- சராசெனிக் கட்டடக்கலை. முகலாயர் கட்டடக்கலை, பிரிட்டிஷ் கட்டடக்கலை, உள்ளூர் கட்டடக்கலை ஆகிய மூன்றும் கலந்ததுதான் இந்த இந்தோ- சராசெனிக் கட்டடக்கலை. இக்கட்டடக்கலை முதல் முதலில் சென்னையில்தான் வடிவமைக்கப்பட்டது. தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த கட்டடக்கலை பரவியது.

சென்னைப் பல்கலைக்கழகத்திலுள்ள நிர்வாகக் கட்டடம், பாரி முனையிலுள்ள பழைய பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம், எழும்பூர் ரயில்வே கட்டடம், பொதுப் பணித் துறை பின்புறமுள்ள கட்டடம், தஞ்சாவூர் அருங்காட்சியகம் (பழைய கலெக்டர் அலுவலகம்), தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்திலுள்ள கண் மருத்துவத் துறை கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் இந்தோ - சராசெனிக் கட்டடக்கலையில் கட்டப்பட்டவை.

பிரிட்டிஷ்காரர்களுக்கு நம்முடைய கட்டடக்கலை பிடித்திருந்தது. அவர்களும் கட்டடக்கலையில் திறன் பெற்றவர்களாக இருந்தனர். இந்நிலையில், தங்களுடைய கட்டடக்கலையுடன் இங்குள்ள கட்டடக்கலையையும் சேர்த்து, இந்தோ - சராசெனிக் என்ற பெயரில் புதிய கட்டடக்கலையை உருவாக்கினர். முகலாயர், பிரிட்டிஷ், உள்ளூர் ஆகிய மூன்றும் கலந்த இக்கட்டடக்கலையை மும்மதம் கலந்த கட்டடக்கலை எனவும் கூறலாம்.

ஆங்கிலேயர்கள் தங்களுடைய வரைபடத்தை வைத்து, நம்மூர் கட்டடக்கலைஞர்களைக் கொண்டு இப்புதிய கட்டடக்கலையை வடிமைத்தனர். இதன் மூலம் நம்முடைய கட்டடக்கலைஞர்களும் கட்டுமானத் திறனை மேம்படுத்திக் கொண்டனர். இக்கட்டடக்கலையில் கட்டடத்தின் உச்சியிலுள்ள குவிமாடம் கூம்பு வடிவத்தில் இருக்கும். தஞ்சாவூர் அருங்காட்சியகத்தின் (பழைய கலெக்டர் அலுவலகம்) முகப்பில் உச்சியிலுள்ள குவிமாடம் வெங்காய வடிவத்தை விட சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.

அலங்கார வளைவுகள் கூராகவும், வளைவு, வளைவாகவும் இருக்கும். பொதுவாக, வளைவுகள் சுண்ணாம்பு, கற்களை வைத்து கட்டுவது வழக்கம். ஆனால், இந்த வளைவுகள் அனைத்தும் கருங்கல்லில் செய்து தூக்கி வைக்கப்பட்டுள்ளது. முகலாயர் கட்டடக்கலையிலிருந்து பிரிட்டிஷ் கட்டடக்கலையைக் கலக்கும்போது இந்தச் சிறப்பம்சங்கள் இடம்பெற்றன.

தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் மையப் பகுதியில் இருக்கும். அடுத்து மேல் மாடிக்குச் செல்லும்போது தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழல் வடிவில் உள்ள இப்படிக்கட்டுகள் நிறைய கணக்கீடுகள் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அமைக்கச் சிறந்த வடிவமைப்பு சிந்தனை தேவை.

இக்கட்டடத்தில், முகலாயர் கட்டடக்கலையின் அடையாளமாக வளைவுகள் முக்கியமானவை. இந்த வளைவுகள் அனைத்திலும் மேலே கருங்கல்லை வைத்து நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல, தூண்கள் நிறைய இருக்கின்றன. பக்கவாட்டிலும் ஸ்தூபி வடிவில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஜன்னல்களில் கொடுங்கை இருக்காது. அதற்கு பதிலாக நிழற்கூரை போன்ற வளைவான அமைப்பு சுவருக்குள் அழுந்திருக்கும். ஜன்னல்களில் தற்போது காணப்படும் நிழற்கூரை பிற்காலத்தில் பொருத்தப்பட்டது.

பிரிட்டிஷ் கட்டடக்கலையின் அடையாளமாக காற்று உள்ளே வந்து செல்லும் விதமான அம்சங்கள் நிறைந்திருந்தன. அறைகளின் மேற்புறத்தில் காற்றோட்டத்துக்கான வழியும், அதைத் திறந்து மூடுவதற்கான வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறைகளும் அதிகபட்சமாக 15 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

உள்ளே ஒரு அறை இருந்தால், அதற்கு வெளியே நீளமான தாழ்வாரம் இருக்கிறது. வெளியிலிருந்து வெப்பம் உள்ளே வராமல் இருப்பதற்காக இந்த வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அறைக் கதவு மூடப்பட்டிருந்தாலும், தேவைப்படும்போது காற்று உள்ளே வருவதற்காகத் திறந்து மூடுவதற்கான வசதியும் உள்ளது. அறைக்குள் காற்றோட்ட வசதியை ஏற்படுத்தியது பிரிட்டிஷ்காரர்கள்தான்.

உள்கூரையில் உத்திரங்களைப் பொருத்தினர். சுடுமண்ணில் (டெரகோட்டா) தரையை அமைத்தனர். ஒட்டுமொத்தமாக இங்குள்ள தட்பவெப்பத்துக்கு ஏற்ப கட்டடக்கலையை வடிவமைத்தனர். உள்ளே வரும் வெப்பக்காற்று வெளியேறும் விதமாக கதவுகளும், உள்கூரையும் உயரமாகவும், மேலே காற்றோட்ட வசதியுடனும் அமைத்தனர்.

கைப்பிடிச் சுவரில் கூட கைப்பிடிகள் அனைத்தும் மரத்தில் அமைக்கப்பட்டது. மாடிக் கைப்பிடிச் சுவரில் துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாலை நேரத்தில் அறையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டி, காற்றோட்ட வசதியும் செய்யப்பட்டது. கட்டடத்தில் அலங்கார வேலைப்பாடுகள் முகலாயர் பாணியிலும், பிரிட்டிஷ் பாணியிலும் இருந்தன.

இதனுடன் உள்ளூர் கட்டுமான முறைகளைச் சேர்த்துக் கொண்டனர். சுண்ணாம்பு, சிறிய அளவிலான செங்கற்கள் உட்பட இங்குள்ள கட்டடப் பொருட்களே பயன்படுத்தப்பட்டன. சுண்ணாம்பையும், மணலையும் நன்றாக அரைத்து, புளிக்க வைத்து நம்முடைய தொழிலாளர்களை வைத்துக் கட்டப்பட்டது. செங்கற்களும் ஒரு அங்குல கணத்திலும், 6 அங்குல நீளத்திலும், 5 அங்குல அகலத்திலும் இருக்கும். இந்த உள்ளூர் தொழில்நுட்பத்தில் சோழர், நாயக்கர், மராட்டியர் கால கட்டடக்கலையின் தாக்கமும் இருந்தது.