தஞ்சை கிராம பகுதிகளில் ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும் 120 ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தஞ்சாவூர் வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் இன்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இக் காத்திருப்பு போராட்டத்தில் இரண்டு பெண்கள் உள்பட 20 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், தஞ்சை கிராமப்பகுதிகளில் பணியாற்றிவரும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 400 பேரில், 120 ஆசிரியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்காமல் இருப்பதால், குடும்ப செலவுகளை நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு சென்று சம்பளம் கேட்டால், இன்னும் வரவில்லை. கோப்புகளை அனுப்பியுள்ளோம் என அலைகழிக்கின்றனர். சிலர் அலுவலகத்தில் உள்ளவர்கள் கேட்பதை கொடுத்து விட்டு, சம்பளத்தை பெற்று கொள்கிறார்கள். இது குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லாமல் உள்ளது. புகார் அளிப்பவர்களை வேண்டும் என பல்வேறு பணிகளை வழங்கி கஷ்டப்படுத்துகின்றனர்.




அதேபோல, உயர் படிப்பு முடித்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களுக்குரிய தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான ஊக்கத் தொகை கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அதற்கான கோப்புகளை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கையூட்டு எதிர்பார்த்து இதுவரை அரசுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனை கண்டித்தும், சம்பளம் வழங்க கோரியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம், இது போன்று கையூட்டு பெறும் அலுவலர்களை கண்காணித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்குள் மாலை 5.15 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் என்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு இதுவரை சம்பளம் வழங்கப்படாத ஆசிரியர்களுக்கு பிரச்சினை சரி செய்யப்பட்டு இன்னும் இரண்டு நாட்களில்  சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, உயர் படிப்பு முடித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு விரைவில் தனி முகாம் நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மாலை 8 மணியளவில் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.